Lilias Trotter (1853 – 1928) was a British missionary to North Africa. In her early twenties, her artworks were noticed by the renowned art critic, John Ruskin. However, Lilias forsook his offer of artistic greatness to continue her ministry work in London. In 1888, she left England, travelled to Algeria and continued there for 40 years, eventually founding the Algeria Mission Band. She brought the gospel to many remote desert and mountain villages around Algeria, using her creativity and artistic gifts.
லிலியாஸ் ட்ரோட்டர்
1. முன்னுரை – தேவனுக்காக தியாகம் செய்த ஓர் ஓவியர்
இன்று நான் பேசப் போகிற மிஷனரியை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்காது என்றும், இவரைப்பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கமாட்டீர்கள் என்றும் நான் நினைக்கிறன். இவர் உலகப்புகழ் வாய்ந்தவராக மாறியிருக்க முடியும். இவருடைய பெயர் உலகின் மூலைமுடுக்குகளிலும், பட்டிதொட்டிகளிலும் ஒலித்திருக்க முடியும். அந்த அளவுக்கு இவர் பிரபலமாயிருக்கலாம், பேரும் புகழும் சம்பாதித்திருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் இவருடைய வாழ்க்கைக் கதவைத் தட்டின. ஆனால், இவர் அவைகளை உதறித்தள்ளிவிட்டு தேவனுக்காகத் திரைமறைவு வாழ்க்கையைத் தெரிந்துகொண்டார். இவர் நித்தியத்துக்குள் நுழைந்து ஒரு நூற்றாண்டுக்குமேல் ஆனபிறகும், இவருடைய வாழ்க்கையைப்பற்றி நாம் இன்று பேசிக்கொண்டிருக்கிறோம் என்றால் அது ஆச்சரியம் இல்லை.
2. குடும்ப பின்னணி – செழிப்பான வாழ்க்கையிலிருந்து ஆழ்ந்த சிந்தனைக்கு
இவருடைய பெயர் லிலியாஸ் ட்ரோட்டர். இவர் 1853இல் இலண்டனில் ஒரு மிகப் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய அப்பா அலெக்சாந்தர் ஒரு பங்குத்தரகர், அதி புத்திசாலி, வெற்றிகரமான தொழில் அதிபர். நாளடைவில் ரயில்வே சம்பந்தப்பட்ட நிறுவனங்களையும் அவர் நிறுவினார். அந்த நாட்களில், ரயில்வே சம்பந்தமான வியாபாரம் மிகவும் இலாபகரமான வியாபாரமாகக் கருதப்பட்டது. லிலியாசின் அம்மா இசபெல்லா. இலண்டனில் மேற்குப் பகுதியில், பெரிய செல்வந்தர்கள் வாழ்ந்த மாலிபர்னில் இவர்களுக்கு மிக அழகான பெரிய வீடு இருந்தது.
லிலியாசின் அப்பா அலெக்சாந்தரின் முதல் மனைவி இறந்துவிட்டார். ஆம், அவர் தாரமிழந்தவர். முதல் திருமணத்தின்மூலம் அவருக்கு ஏற்கெனவே ஆறு குழந்தைகள் இருந்தார்கள். இசபெல்லா அவருடைய இரண்டாவது மனைவி. இவருக்கு மூன்று குழந்தைகள். மூன்று குழந்தைகளைப் பெறுவதற்குமுன்பே அவர் ஆறு குழந்தைகளுக்கு மாற்றாந்தாயாய் இருந்து, அவர்களை வளர்த்தார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவர் பெற்றெடுத்த மூன்று குழந்தைகளில் ஒருவர் லிலியாஸ்.
ஒன்பது குழந்தைகளையும் அவர் மிகவும் சாமர்தியமாகவும், திறமையாகவும் வளர்த்தார். வீட்டில் குழந்தைகளைக் கவனிக்கவும், அவர்களுக்குப் பாடம் கற்பிக்கவும், பயிற்சி அளிக்கவும் ஆட்கள் இருந்தார்கள். இவர்களை ஆசிரியர்கள் அல்லது தாதிகள் என்று சொல்லலாம். இளமையிலேயே அவர்கள் அனைவரும் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளையும், இசையும், கலையும் கற்றார்கள். கோடைகாலத்தில் குடும்பமாக ஐரோப்பா முழுவதும் சுற்றுப்பயணம் சென்றுவந்தார்கள். கடலோர நகரங்களில், கடற்கரைகளில், காடுகளில், மலைகளில் துள்ளித்திருந்தார்கள். விடுமுறைகளை உல்லாசமாய்க் கழித்தார்கள். இனிமையான இளமைப்பருவம்.
பிள்ளைகள் எல்லாரிடமும் ஒழுங்கும், ஒழுக்கமும் மேலோங்கியிருந்தன. குழந்தைகள் எல்லாரையும்போல் லிலியாஸ் உயர்ந்த ஒழுக்கமுடைய பெண். அவரிடம் ஒழுங்கும், ஒழுக்கமும் சற்று கூடுதலாக இருந்தது என்றுகூடச் சொல்லலாம். எல்லாரும் அவர்களுடைய ஊரிலிருந்த ஆலயத்திற்குத் தவறாமல் போய்வந்தார்கள். அவருடைய பெற்றோர் ஆலயத்தின் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். குடும்பத்தில் இருந்த ஒவ்வொருவரும் உண்மையாகவே தேவனை விசுவாசித்தார்கள்.
லிலியாஸ் மிகவும் உறுதியான பெண், சுதந்திரமான பெண், பலமான பெண். தேவனுடைய படைப்பின் பெரிய சிறிய காரியங்களில் உள்ள அழகை இனங்காணும் அற்புதமான உணர்திறன் லிலியாஸிடம் இளமையிலே இருந்தது. அவர் எல்லாவற்றிலும் அழகைக் கண்டார், ரசித்தார், மகிழ்ந்தார். ஆம், அவர் கலையில், ஓவியத்தில் அதீத திறமையுடையவர். லிலியாசின் இந்தத் திறமையை, தாலந்தை, அவருடைய அம்மா ஆரம்பத்திலேயே புரிந்துகொண்டார். எனவே, அவர் லிலியாசின் திறமைகளை வளர்த்துக்கொள்ள ஊக்குவித்தார், உற்சாகப்படுத்தினார்.
இவ்வளவு அழகான, அன்பான குடும்பத்தில் அவர் விரும்பிய அனைத்தும் அவருக்குக் கிடைத்தன. பொருளாதார வசதி தாராளமாக இருந்தது; உணர்ச்சிபூர்வமான ஆதரவு அபரிமிதமாகக் கிடைத்தது; ஆவிக்குரிய வாழ்க்கைக்குத் தேவையான ஆரோக்கியமான சூழல் நிறைந்திருந்தது. இந்த நிலைமையில் லிலியாசின் அப்பா அலெக்சாந்தர் ஒருநாள் திடீரென காலமானார். லிலியாசுக்கு அப்போது வயது 12. அவருடைய அப்பாவின் மறைவுக்குப்பின் அவருடைய அம்மா அந்த சோகத்திலிருந்து மீளவேயில்லை. லில்லியும் உடைந்துபோனார். அதுவரை தன் வாழ்க்கை மிகவும் பாதுகாப்பானது என்றும், அது எப்படிப் பயணிக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகக் கணித்திருந்தார். ஆனால், அவருடைய அப்பாவின் திடீர் மரணத்தினால் வாழ்க்கையைப்பற்றிய அவருடைய பார்வை முற்றிலும் சிதைந்தது. இதற்குப்பிறகு அவர் கருத்தார்வமும், கருத்தூன்றியவருமானார்; ஆவியில் மிகவும் நிதானமானார்; காரியங்களைக் கருத்தாய் ஆராய்ந்தார். அப்பாவின் திடீர் மறைவு அவரைத் தேவனைவிட்டுத் தூரமாகக்கவில்லை; மாறாக தேவன்பால் திருப்பியது. அவருடைய குடும்பத்தில் எல்லாரும் நேரம் ஒதுக்கி சேர்ந்து அமர்ந்து வேதாகமம் வாசித்தார்கள்; ஞாயிறு வகுப்பில் தவறாமல் கலந்துகொண்டார்கள்; ஆலயத்தின் ஆராதனைகளிலும், எல்லாவிதமான செயல்பாடுகளிலும் மனமுவந்து பங்கெடுத்தார்கள். இதனால் லிலியாசுக்கு வேதாகமத்தையும், தேவனையும்பற்றிய ஒருவகையான புரிதல் இருந்தது. ஆனால், இப்போதுதான் அவர் தன் வாழ்வில் முதன்முறையாகத் தேவனுடைய அன்பை தனிப்பட்டவிதத்தில் அனுபவித்தார், தேவன் உண்மையிலேயே தன் பரலோகத் தந்தை என்று கண்டார்.
அந்த நேரத்தில் லில்லி எப்படி இருந்தார் என்பதைப்பற்றி அவருடைய ஒரு சகோதரி, "அவள் வீட்டில் இருக்கும்போது வீடு முழுவதும் ஒருவகையான ஒளி நிரம்பியிருக்கும். அவள் விவரிக்கமுடியாத நிலையான ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தாள்," என்று கூறுகிறார். அவருடைய அம்மா லில்லியின் கல்வியில் கண்ணுங்கருத்துமாய் இருந்தார். அவருடைய அப்பா இறந்தபிறகும் எல்லாருடைய கல்வியும் எந்தத் தொய்வுமில்லாமல் தொடர்ந்தது.
ஒருமுறை லில்லியின் கல்வியின் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நாட்களில் மக்கள் ஸ்டேஜ்கோச் என்றழைக்கப்படும் குதிரைவண்டியில்தான் பொதுவாகப் பயணித்தார்கள். லில்லி இந்தப் பயணத்தை முடித்து வீட்டுக்குத் திரும்பியதும் தான் வழியில் கண்ட காட்சிகளையெல்லாம் அப்படியே தத்ரூபமாக வரைந்தார். தன்னைச் சுற்றியிருந்த அழகை அவர் ரசித்தார்; அதனால் அவர் வசீகரிக்கப்பட்டார். அவருக்கு அவ்வளவு உணர்திறனும், நினைவாற்றலும், கலைத்திறனும் இருந்தன. ஒரு முறை, அவர் சுவிச்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைகளுக்குச் சென்றபோது, புத்தம் புதிய பனியால் மூடப்பட்ட மலைகளைப் பார்த்தார்; அதைக் கண்டபோது அவர் கண்ணீர் விட்டு அழுதார். அவருக்கு அப்போது பதின்மவயது. கலை, அழகு, ஓவியம் ஆகியவைகளின்மேல் இவ்வளவு ஆழமான உணர்ச்சியும், ஈடுபாடும், ஆர்வமும், அவைகளைக்குறித்த படைப்பாற்றலும் இருந்தது; அவர் தெளிந்த மனதுடையவர்; உயர்ந்த ஒழுக்கமுடையவர்; ஒழுங்கான வாழ்க்கையுடையவர்; இவைகளை அவர் இளமையிலேயே கற்றுக்கொண்டார்.
அப்போது லிலியாசுக்கு வயது 20. அவருடைய அம்மாவும் அவரும் ஒரு கிறிஸ்தவ மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். இது ஒரு புதிய மாநாடு. அந்த நேரத்தில், இது கெஸ்விக் மாநாடு என்று அழைக்கப்பட்டது. இன்றும் இது நடைபெறுகிறது. லில்லி கலந்துகொண்ட மாநாட்டில் வில்லியம் வில்பர்ஃபோர்ஸின் மகன், எழுத்தாளர் ஜார்ஜ் மெக்டொனால்டும் அக்காலத்தின் முக்கியமான சில இறையியலாளர்களும், ஆசிரியர்களும் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களின் பட்டியலில் அவர்களும் இடம்பெற்றிருந்தார்கள். லிலியாசுக்கு இது மிகவும் முக்கியமான தருணம். இந்தக் கூட்டத்தில்தான் லில்லி தன் வாழ்நாளில் முதல்முறையாக நடைமுறைக்குரிய இறையியலைக் கேள்விப்பட்டார். ஒரு கிறிஸ்தவன் தன் விசுவாசத்தை ஒவ்வொரு நாளும் எப்படி வாழ வேண்டும் என்று இந்தக் கூட்டங்களில் வலியுறுத்திப் பேசினார்கள். அது லில்லியின் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. லில்லி எல்லாவற்றையும் உள்வாங்கிக்கொண்டார். அவர் இந்த நேரத்தில் நிறையக் கற்றுக்கொண்டார்.
இந்த நேரத்தில், இங்கிலாந்தில் அப்போது இன்னோர் அசாதாரணமான நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்தது. அமெரிக்காவிலிருந்து வந்த ஒரு பிரசங்கியார் இங்கிலாந்து முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, குறிப்பாக, இலண்டனில், நற்செய்திக் கூட்டங்களில் பேசிக்கொண்டிருந்தார். இதில் என்ன அசாதாரணம் இருக்கிறது என்றால் அந்தப் பிரசங்கியார் படிப்பறிவில்லாதவர், வாலிபர், இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்குமுன் காலணி விற்றவர். ஆம், டி.எல்.மூடிதான் அந்தப் பிரசங்கியார். அவர் இங்கிலாந்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இங்கிலாந்தின் ஊடகங்கள் அவரைக் கடுமையாகவும், கொடுமையாகவும் விமரிசித்தன. அவர்கள் அவரைக் கேலி செய்தார்கள்; அவருடைய ஆங்கில உச்சரிப்பு, அவர் பேசிய பாணி எல்லாவற்றிலும் அமெரிக்கத்தனம் மேலோங்கியிருந்ததால் இங்கிலாந்துக்காரர்கள் அவரைப் பரிகாசம்செய்தார்கள். அவர்கள் அதை விரும்பவில்லை. ஆனால் டி.எல்.மூடியின் நேர்மை, நற்செய்தியின் தெளிவு, நல்ல நகைச்சுவை மக்களைக் கவர்ந்தது. விரைவில் 1000க்கும் மேற்பட்ட மக்கள் அவருடைய கூட்டங்களில் கலந்துகொள்ளத் தொடங்கினார்கள். இங்கிலாந்தில் ஒரு மாபெரும் எழுப்புதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் இங்கிலாந்தின் அரசி விக்டோரியாகூட இதை ஆமோதித்தார். ஆயினும், அவர் டி.எல்.மூடியின் பாணி தன் ரசனைக்கு ஏற்றாற்போல் இல்லை என்று கூறினார்.
இங்கிலாந்தில் பாய்ந்த எழுப்புதல் நீரோட்டத்தில் லில்லியும் அடித்துச்செல்லப்பட்டார். நாடு முழுவதும் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன. லில்லி ஆவிக்குரிய பல்வேறு பணிவிடைகளில் தன்னார்வத் தொண்டராகப் பணிபுரிந்தார். இதற்கான பல வாய்ப்புகள் அவரைத் தேடிவந்தன. அவருடைய குடும்பத்திற்கு இருந்த தொடர்பின் காரணமாக, வெல்பெக் இன்ஸ்டிட்யூட் என்று அழைக்கப்படும் ஓர் இடத்தில் அவர் வேதபாட வகுப்புகள் நடத்த ஆரம்பித்தார். முதலில் அங்கு அவர் உதவிசெய்யச் சென்றார். ஆனால், பின்னர் அவரே அதை நடத்த ஆரம்பித்தார்.
டி.எல்.மூடி இலண்டனில் நற்செய்திக் கூட்டங்கள் நடத்தியபோது லிலியாஸ் அவருடைய பாடகர் குழுவில் சேர்ந்து பாடினார். கூட்டங்கள் முடிந்தபிறகு கூட்டத்துக்கு வந்தவர்களுக்கு, விரும்பியவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்; பேச விரும்பியவர்களோடு ஐக்கியம்கொண்டார். இப்படிப்பட்ட வாய்ப்புகள் லில்லிக்கு வந்து குவிந்தன. இவைகளின்மூலம் லில்லி நிறையக் கற்றுக்கொண்டார்.
இந்த நேரத்தில் அவருக்கு வயது 21. டி.எல்.மூடி லில்லிக்கு ஒரு பெரிய உந்துதலாக மாறினார். அவருடைய தைரியம், எளிமை, பிரசங்க உத்திகள், தெளிந்த பார்வை, பலவிதமான மக்களோடும் தொடர்புகொண்ட விதம், லில்லியை வெகுவாகக் கவர்ந்தன.
3. கலைத் திறமை மற்றும் இறைவேலைக்கான அழைப்பு – உலகப் புகழை உதறிவிட்டு தேவ வழியில்:
பரபரப்பான அலுவல்கள் அதிகம் இருந்தபோதும், அவர் பயணம் செய்வதற்கும் நேரம் ஒதுக்கினார். ஒருமுறை அவரும், அவருடையம் அம்மாவும் சுவிட்சர்லாந்துவழியாக வெனிஸ் நகரத்துப் போய்க்கொண்டிருந்தார்கள். போகும் வழியில், கிராண்ட் கனால் என்ற இடத்திலுள்ள கிராண்ட் ஹோட்டலில் தங்கினார்கள். அங்கு இருந்த வருகைப் பதிவேட்டில் தங்களுடைய விவரங்களை எழுதும்போது, அங்கு எழுதப்பட்டிருந்த ஒரு பெயர் லில்லியின் அம்மா இசபெல்லாவின் கவனத்தை ஈர்த்தது. அவருடைய பெயர் ஜான் ரஸ்கின். அவர் ஐரோப்பா முழுவதும் மிகப் பிரபலமான, புகழ்பெற்ற கலை விமரிசகர். அவர் அப்போது அந்த ஹோட்டலில்தான் தங்கியிருந்தார்.
இசபெல்லா அந்த வாய்ப்பைப் பயன்படுத்த விரும்பினார். கலை விமரிசகர் ஜான் ரஸ்கினைச் சந்திப்பதை அவர் ஒரு பொன்னான வாய்ப்பாகக் கருதினார். ஜான் ரஸ்கின் தன் மகளின் கலைப்படைப்புகளைப் பார்த்துத் தன் கருத்துக்களை சொன்னால் எவ்வளவு அருமையாக இருக்கும் என்று அவர் நினைத்துப்பார்த்தார். இதுபோன்ற வாய்ப்பு வாழ்நாளில் ஒருமுறைதான் வரும் என்று அவர் நினைத்தார். அந்த நேரத்தில் லில்லி பலவிதமான நீர்வண்ணங்களில் ஓவியம் வரைந்துகொண்டிருந்தார். "ஐரோப்பாவின் மிகப் பிரபலமான கலை விமர்சகர் ஜான் ரஸ்கின் என் மகளின் கலைப் படைப்புகளைப் பார்ப்பாரா?" இசபெல்லா முயற்சிசெய்ய நினைத்தார். "என் மகள் நீர்வண்ணத்தில் தீட்டிய சில கலைப்படைப்புக்களைப் பேராசிரியர் ரஸ்கினுக்கு அனுப்புவதில் திருமதி இசபெல்லா ட்ரோட்டெராகிய நான் மகிழ்ச்சியடைகிறேன். நீங்கள் இந்தப் படைப்புகளை அங்கீகரிக்காமல் நிராகரித்தாலும் அதையும் ஏற்றுக்கொள்வதற்கு திருமதி இசபெல்லா ட்ரோட்டெராகிய நான் தயாராக இருக்கிறேன். என் மகள் ஓவியம் வரைவதை முறையாகக் கற்கவில்லை. ஆயினும், திருமதி இசபெல்லா ட்ரோட்டெராகிய பான் திரு. ரஸ்கினின் கருத்தை அறிந்துகொள்வது மிகவும் விலையேறப்பெற்றது," என்று ஒரு குறிப்பை எழுதி ரஸ்கினுக்கு அனுப்பினார்.
அந்த நாட்களில் ரஸ்கின் மிகப் பிரபலமான ஓவியர், கலைஞர், கலைவிமரிசகர். பஞ்ச் என்ற ஒரு நாளிதழில் அவர் கலைப் படைப்புகளைப்பற்றி விமரிசனம் எழுதினார். அவர் எவ்வளவு பெரிய கலைவிமரிசகர் என்பதற்கு இதோ ஓர் எடுத்துக்காட்டு! ஒருமுறை அவர் ஒரு கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த ஓவியங்களைப்பற்றி, "ஓவியங்களும், கலைப்படைப்புகளுமாகிய எங்களைப்பற்றி ரஸ்கின் வனவிலங்கைப்போல் கடித்துக் குதறுவதற்குமுன், அவரிடமிருந்து எந்தப் புகாரும் வருவதற்குமுன், எங்களை வரைந்த, நாங்கள் உலர்வதற்குமுன் விற்றுவிடுகிறோம். ரஸ்கின் மூக்கை நுழைத்துவிட்டால் நாங்கள் தொலைந்தோம்," என்று ஒவ்வியங்கள் தங்களைபற்றிச் சொல்வதுபோல் விமரிசனம் எழுதினார். அந்த அளவுக்கு அவர் செல்வாக்குமிக்கவர்.
ஜான் ரஸ்கின் எங்கு சென்றாலும் இதுபோன்ற குறுக்கீடுகள் வருவது வழக்கம். மக்கள் அவரைச் சந்திக்க விரும்பினார்கள்; அவரோடு பேச விரும்பினார்கள். எனவே, எலிசபெத் எழுதியனுப்பியிருந்த குறிப்பு அவருக்குப் புதிதல்ல. அவர் எலிசபெத் அனுப்பியிருந்த ஓவியங்களைப் பார்க்க ஒப்புக்கொண்டார். எலிசபெத்தும் சாமான்யமான ஒரு பெண் அல்ல. அவர் சமுதாயத்தில் மிக உயர்ந்த அந்தஸ்துடையவர். எலிசபெத் அனுப்பியிருந்த ஓவியங்களை ரஸ்கின் ஒரு புரட்டுப் புரட்டினார். பார்த்ததும் திகைத்துப்போனார். அவை கலையை முறையாகக் கற்காத ஒருவர் பொழுதுபோக்காக வரைந்தவைபோல் தோன்றவில்லை. அவை கற்றுத்தேர்ந்த ஒருவருடைய கைவண்ணம்போல் தோன்றின. அவைகளின் வேலைப்பாடு, வண்ணங்களின் பயன்பாடு ஆகியவைகளைக் கண்டு அவர் மலைத்துப்போனார். ஓவியங்களின் பின்புலத்தில் ஒளிவண்ணம் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பது அவருக்குத் தெரியும். ஆனால், அந்த ஓவியங்களை வரைந்தவர் எவ்வளவு திறமையானவர் என்பதை இந்த மேதை உடனே கண்டுகொண்டார். "உடனடியாக என்னை வந்து பாருங்கள்," என்று ரஸ்கின் எலிசபெத்துக்குப் பதில் எழுதினார். லில்லியும், அவருடைய அம்மாவும் ரஸ்கினைச் சந்தித்தார்கள். ரஸ்கின் லிலியாசுக்கு முறையாகக் கற்பிக்க ஒப்புக்கொண்டார். கற்பித்தார். லிலியாஸ் ரஸ்கினிடமிருந்து பல பாடங்களைக் கற்றுத் தேறினார். லில்லி கற்றுக்கொண்ட வேகத்தையும், விதத்தையும் கண்டு ரஸ்கின் ஆச்சரியப்பட்டார். லில்லி காலையில், ஓவியத்தில் பல திறமைகளை வளர்த்துக்கொண்டார். பேராசிரியர் ரஸ்கின் லில்லியை மாணவியாக ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கற்பித்தார்.
1879இல் லில்லியின் வாழ்க்கையில் பல திருப்பங்கள் ஏற்பட்டன. அவருடைய அம்மா இருதய நோயினால் பாதிக்கப்பட்டு காலமானார். இப்போது பெற்றோர் இருவரும் இறந்துவிட்டார்கள்; உடன்பிறந்தவர்கள் அனைவரும் திருமணமாகி தனித்தனியேபோய்விட்டார்கள். லிலியாஸ் தனியாக நின்றார். திக்குத்தெரியாத காட்டில் கண்ணைக்கட்டிக்கொண்டு இருப்பதுபோல் உணர்ந்தார்.
இவர்களுக்கிடையில் அவருடைய கலை ஆர்வம் சற்றும் குறையவில்லை. தன் திறமைகளை அவர் வளர்த்துக்கொண்டிருந்தார். ஓவியங்கள் வரைந்தார். அதே நேரத்தில், ஊழியமும்செய்துகொண்டிருந்தார். வேதபாட வகுப்புகள் தொடர்ந்து நடத்தினார்; மக்களை சந்தித்தார்; நற்செய்தி அறிவித்தார்; கிறிஸ்தவக் கூட்டங்களில் ஆலோசனை வழங்கினார்.
ரஸ்கின் நாட்டுப்புறத்தில் இருந்த தன் பிராண்ட்வுட் Brantwood தோட்டத்தில் கலையில் சிறந்த மாணவர்களுக்கு அவ்வப்போது வகுப்புகள் நடத்தினார், கற்பித்தார். லில்லியையும் அதில் கலந்துகொள்ள அழைத்தார். லில்லியும் தவறாமல் கலந்துகொண்டார். ஒருமுறை ரஸ்கின் லில்லியிடம், "நீ உன் வாழ்க்கையைக் கலைக்காக அர்ப்பணித்தால், உன் வாழ்நாளில் நீதான் தலைசிறந்த ஓவியராக இருப்பாய். காலத்தால் அழிக்கமுடியாத அற்புதமான படைப்புகளை நீ படைப்பாய். நீ முடிவுசெய். என்ன செய்யப்போகிறாய்?" என்று கூறினார். லில்லி இந்த விஷயத்தைத் தன் நண்பர் ஒருவரிடம் கூறி, தனக்காக ஜெபிக்குமாறு வேண்டினார். "ரஸ்கின் என்னிடம் கூறியவைகளை நினைக்கும்போது நான் எப்படி என் முடியின் நிறத்தை மாற்றமுடியாதோ அதுபோல் என் கிருபாவரங்களையும் மாற்றமுடியாது; மாற்ற விரும்பவில்லை. ஆனால், கலையையும், ஓவியதையும்விட அதிக முக்கியமான காரியங்களுக்கு என் வாழ்க்கையைக் கொடுக்கவேண்டும் என்று நான் நினைக்கிறன். இதுவும் தேவன் தந்த கொடைதான். ஆனால், இதைவிட முக்கியமான கொடைகள் இருக்கின்றனவே. எனவே, இதில் நான் தெளிவான முடிவு எடுக்க, தேவனுடைய வழியைத் தெரிந்துகொள்ள, எனக்காக ஜெபிப்பாயா?" என்று கடிதம் எழுதினார்.
கலையில், ஓவியம் வரைவதில், லிலியாசுக்கு அபரிமிதமான ஆற்றல் இருப்பதாக ரஸ்கின் உறுதியாக நம்பினார். லில்லி தன்னிடம் இன்னும் கொஞ்சம் கற்றுக்கொண்டபின், அவர் கலைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தால் ஐரோப்பாவில் தனக்கு இருக்கும் செல்வாக்கினாலும், தொடர்பினாலும் லில்லி ஒப்பற்ற ஒரு கலைஞராக முடியும் என்று ரஸ்கின் நம்பினார். உண்மையாகவே, லில்லி அசாத்தியமான திறமையுடைவர். அவர் எல்லாவற்றையும் எளிதில் கற்றுக்கொண்டார்.
அப்போது லில்லிக்கு 26 வயது. அந்த நேரத்தில் லில்லி ஊழியத்தில் அதிகமான ஈடுபாடுகொண்டிருந்தார் என்று ரஸ்கினுக்குத் தெரியும். லில்லி மோசமான மக்களைச் சந்திப்பதையும், அவர்களோடு அதிக நேரம் செலவழிப்பதையும், அவர்களுக்குப் பணிவிடைசெய்வதையும் அதிகம் விரும்பினார். ரஸ்கின் இதை விரும்பவில்லை, ஆமோதிக்கவில்லை. "நீ செய்கிற இந்த ஊழியத்தை வேறு யாராவது செய்யமுடியும். ஆனால், நீ தனித்துவமானவள்; உன்னுடைய திறமை, ஆற்றல், தனித்துவமானது. நீ உன் திறமையையும், நேரத்தையும் வீணாக்கிக்கொண்டிருக்கிறாய்," என்று ரஸ்கின் கூறினார். லிலியாஸ் நிச்சயமாகக் கலையை மிகவும் விரும்பினார். ஓவியத்தில் அவருக்கு நாட்டம் உண்டு. எனவே, ரஸ்கினின் கேள்வி அவரைத் தொந்தரவு செய்தது. என்ன செய்வது என்று தெரியவில்லை. அவளால் தூங்கவோ சாப்பிடவோ முடியவில்லை; நாட்கள் வருடங்கள்போல் மெல்ல நகர்வதாக அவர் உணர்ந்தார். அவரால் முடிவுசெய்ய முடியவில்லை. அதை நினைக்க நினைக்க மூச்சுத்திணறல்தான் ஏற்பட்டது. இறுதியாக, மே 1879இல், அவர் ரஸ்கினுக்கு, "நான் என்ன செய்யவேண்டும் என்று தீர்மானித்துவிட்டேன். பட்டப்பகலில் எல்லாம் தெளிவாகத் தெரிவதுபோல், இப்போது எல்லாம் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. இப்போது எனக்கு எந்தக் கலக்கமோ, குழப்பமோ இல்லை. நீங்கள் சொல்லுகிற, எதிர்பார்க்கிற, விதத்தில் என்னால் என்னை கலைக்கு அர்ப்பணிக்க முடியாது. நான் முதலாவது தேவனையும், தேவனுடைய அரசையும் தேடப்போகிறேன்," என்று எழுதினார்.
"லில்லி இப்படி ஒரு முடிவு எடுத்திருக்கத் தேவையில்லை. அவர் இரண்டையும் செய்திருக்கலாம்," என்று அன்றும் சிலர் சொன்னார்கள்; இன்றும் சிலர் சொல்லுகிறார்கள். ஆனால். இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்குமாறு தேவன் தன்னை நடத்துவதாக லில்லி ஆழமாக உணர்ந்தார். எனவே, அவர் ஒன்றைத் தெரிந்தெடுக்கவேண்டியிருந்தது. லில்லி கர்த்தருடைய நடத்துதலுக்குக் கீழ்ப்படிந்து தேவனுடைய அரசைப் பின்பற்றத் தீர்மானித்தார். "தேவன் கொடுக்கச் சொல்லும்போது, கொடுக்காமல் வைத்திருப்பது இழப்பு," என்று அவர் பிற்காலத்தில் எழுதினார்.
அவர் இப்படித் தீர்மானித்தபிறகு அவருடைய வாழ்க்கை வழக்கம்போல் தொடர்ந்தது. அவர் அவ்வப்போது ரஸ்கினைத் தொடர்புகொண்டார். ஆனாலும், அவர் ரஸ்கினைப் பார்ப்பதைத் தவிர்த்தார். பயந்தார் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால், ரஸ்கின் கொடுக்கும் அழுத்தத்தைத் தாங்கமுடியாமல் தான் தன் மனதை மாற்றிவிடக்கூடுமோ என்ற பயம். அதனால் தவிர்த்தார். ஆனால், அவர் தான் எடுத்த முடிவில் உறுதியாக இருந்தார். அவர் கடைசிவரை ரஸ்கினின் சிறந்த மாணவியாக இருந்தார். ரஸ்கின் லில்லியின் நீர்வண்ண ஓவியங்களைப் புகழ்பெற்ற பிற கலைஞர்களுடன் தொடர்ந்து பகிர்ந்துகொண்டார். அவர்கள் அவைகளை வெகுவாய்ப் பாராட்டினார்கள்.
இதற்கிடையில், லில்லி வெல்பெக் நிறுவனத்தில் மும்முரமாக இறங்கினார். இந்த நிறுவனமும் வேறு சில நிறுவனங்களும் சேர்ந்து YWCA ஆக மாறியது; இது YMCAஇன் இணை. அப்போது YWCA ஒரு கிறிஸ்தவ அமைப்பாக இருந்தது.
இலண்டனின் மையப் பகுதியில் இருந்த இந்தக் குறிப்பிட்ட பகுதியில் வறுமை கோரத்தாண்டவம் ஆடியது. கிராமப்புறங்களிலிருந்து மக்கள் வேலை தேடி பெரு நகரங்களுக்குப் படையெடுத்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி வேலை உடனே கிடைக்கவில்லை. வருமானம் இல்லை; தங்க இடம் கிடைக்கவில்லை; பசி, பட்டினி. குறிப்பாக பெண்கள் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள். வேலைக்கு அமர்த்துவதற்குத் தேவையான கல்வியோ, திறமையோ இல்லாததால் வேலை கிடைக்காமல் தத்தளித்தார்கள், நகரத்தில் சிக்கித் தவித்தார்கள். வாழ வழியில்லாமல் விபச்சாரத்தில் இறங்கினார்கள். இந்தப் பெண்கள் தெருவில் நடப்பவர்கள் street walkers என்று அழைக்கப்பட்டார்கள். இரவில் தெருக்களில்தான் திரிந்தார்கள். பின்னர் பகலில் விக்டோரியா ரயில் நிலையத்தைச்சுற்றி படுத்துறங்கினார்கள். இந்தப் பெண்கள் சமூகத்தின் அசிங்கமாகக் கருதப்பட்டார்கள். இந்தப் பெண்களை நினைத்து லிலியாஸ் கதறினார். இவர்கள்பால் லிலியாஸ் ஈர்க்கப்பட்டார். லில்லி இரவு நேரத்தில் வெளியே போய் இந்தப் பெண்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவர்களை விடுதிக்கு வருமாறு வற்புறுத்தினார்; அழைத்து வந்தார். அவர்களுக்கு உறங்க இடமும், உண்ண உணவும் அவர் ஏற்பாடு செய்தார். அவர்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்குத் தகுதியான திறமைகளைக் கற்பித்தார். வேலை வாங்கிக் கொடுத்தார். மனநிலை பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தார்கள். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமுடையவர்கள் இருந்தார்கள்; அந்தத் தொழிலை விட மனதில்லாதவர்கள் இருந்தார்கள். இவர்கள் எல்லாரையும் லிலியாஸ் கவனித்துக்கொண்டார்.
இப்படி ஒரு பக்கம், மும்முரமாக ஊழியங்கள் நடைபெற்றன. இவைகளுக்கு மத்தியிலும், இன்னொரு புறம், லில்லி தொடர்ந்து ஓவியங்கள் வரைந்தார்; அவருடைய கலை ஆர்வம் தணியவில்லை. அவர் தன் கலை படைப்புக்களை ரஸ்கினுக்கு அனுப்பிக்கொண்டிருந்தார். ரஸ்கின் லில்லியின் படைப்புக்களை இப்போது ரசிக்கவில்லை; அவர் மகிழ்ச்சியடையவில்லை. அவர் லில்லியின் ஓவியங்களைக் கடுமையாக விமரிசித்தார். "உன் கலைப்படைப்புகளில் முன்புபோல் இப்போது உயிர் இல்லை; அவை இப்போது மிகவும் வறட்சியாக உள்ளன. முன்பு உன் ஓவியங்களில் அழகு இருந்தது. இப்போது நிறத்தைப்பற்றிய உன் உணர்வு மங்கிவிட்டது. நீ இப்போது இலண்டன் தெருக்களில் செய்துகொண்டிருக்கும் உன் சேவையின் மோசமான நிலைதான் உன் ஓவியங்களிலும் தெரிகிறது. இலண்டன் தெருக்களின் அவலங்களும், அருவருப்பும்தான் உன் ஓவியங்களில் மேலோங்கி காணப்படுகின்றன. உன் ஓவியங்களில் மகிழ்ச்சி, அழகு இல்லை; மாறாக, துக்கம், வருத்தம், சோகம், உழைப்பு, ஆகியவைகள் நிறைந்து வழிகின்றன," என்று கூறினார். ரஸ்கின் கூறியது ஒருவேளை உண்மையாக இருக்கலாம். லில்லியாசுக்கு ஒருவேளை அது கசப்பாகவும் இருந்திருக்கலாம்.
1884இல் லிலியாசின் உடல்நிலை சரியில்லாமல் போயிற்று. அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அவருடைய நோயைப்பற்றிய முழுமையான விவரம் தெரியவில்லை. ஒரு சிறிய அறுவை சிகிச்சை. அறுவை சிகிச்சைக்குப்பின் அவர் மிகவும் சோர்வாக இருந்தார். அறுவை சிகிச்சைக்குப்பின் பழைய நிலைக்குத் திரும்ப, குணமடைய நீண்ட காலம் ஆயிற்று. அறுவை சிகிச்சைக்குப்பின் சில சிக்கல்களும் ஏற்பட்டன. இந்த சிக்கல்கள் அவருடைய இருதயத்தைப் பாதித்தன. இதன் விளைவாக அவர் தன் வாழ்நாள் முழுவதும் பலவீனமான இருதயத்துடன்தான் வாழ்ந்தார். இது அவருக்கு ஒரு முள்ளாக மாறிற்று.
இலண்டன் நகரத்தில் அப்போது அதிகமான பெண் தொழிலாளர்கள் இருப்பதை லில்லி கவனித்தார். அந்தக் காலத்தில், அதாவது 1800களில், பெண்கள் உணவகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. எனவே, மதிய உணவு நேரத்தில் அல்லது இடைவேளையின்போது பெண் தொழிலாளர்கள் பெரும்பாலும் தெருக்களில் உட்கார்ந்து சாப்பிட்டார்கள். உணவகங்கள், மனமகிழ்மன்றங்கள், ஆடல்பாடல் நடன அரங்கங்கள்போன்ற இடங்களுக்குள் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டார்கள். பெண்களுக்கு அனுமதி கிடையாது. பெண்கள் ஒதுக்கப்பட்டவர்கள். லில்லி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பெண்களுக்கு மட்டும் என்று பிரத்தியேகமாக ஓர் உணவகத்தை ஏற்படுத்தினார். ஒரு பெரிய இடத்தை வாங்கி ஒரு பெரிய உணவகத்தை ஏற்படுத்தவில்லை. அவர் வேதபாட வகுப்புகள் நடத்திக்கொண்டிருந்த இடத்தில் ஒரு பெரிய அறையைப் பெண்களுக்கென்று ஒதுக்கினார். அங்கு பெண்களுக்கு மலிவு விலையில் உணவு விற்கப்பட்டது. பெண்களுக்கு மட்டும். அங்கு அவர்கள் உட்கார்ந்து சாப்பிடவும் முடியும். இது பெண்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப்பெற்றது. எனவே, மோர்லி அரங்கம் என்ற இன்னோர் இடத்திலும் ஓர் உணவகம் திறக்கப்பட்டது. அங்கு பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உணவு வழங்கப்பட்டது. இந்த இரண்டு இடங்களிலும் வேதபாட வகுப்புகள் நடத்துவற்கும் இடம் இருந்தது. உணவு வாங்கவோ, சாப்பிடவோ வந்த பெண்கள் அங்கு நடந்துகொண்டிருந்த வேதபாட வகுப்புகளில் கலந்துகொண்டார்கள். அந்தப் பெண்களுக்கு லில்லி பொதுவான கல்வியும், வாழ்க்கை நெறிமுறைகளும் கற்பித்தார். லில்லி மிகத் திறமையான ஒரு தலைவி; அவர் தொலைநோக்குப் பார்வை கொண்டவர், ஒரு முன்னோடி. அவர் விரும்பியிருந்தால் அவர் இன்னும் பல காரியங்களைச் செய்திருக்க முடியும். ஒரு குழு அவருடைய யோசனைகளை ஏற்றுக்கொண்டு, அவருக்குப் போதுமான நிதியுதவி அளித்து அவரை ஆதரித்தது. அவர் உண்மையிலேயே இலண்டனை நேசித்தார். இலண்டன் மாநகரத்தில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்காக அவர் தன் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருந்தார்.
அந்த நேரத்தில், டி.எல்.மூடியின் வருகையினால் ஏற்பட்ட எழுப்புதல் தீ இங்கிலாந்து நாடு முழுவதும் பற்றி எரிந்தது. எனவே, இதுவரை நற்செய்தி அறிவிக்கப்படாத நாடுகளில் நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்ற தாகத்தோடும், பாரத்தோடும் அநேக மிஷனரிகள் தொலைதூர நாடுகளுக்குப் புறப்பட்டார்கள். இதனால் இங்கிலாந்து முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நேரத்தில்தான் ஜேம்ஸ் ஹட்சன் டெய்லர் சீனாவிற்கும், வில்லியம் கேரி இந்தியாவிற்கும், டேவிட் லிவிங்ஸ்டன் மத்திய ஆப்பிரிக்காவிற்கும், விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், இராணுவ அதிகாரிகள், உயர்பதவியில் இருந்தவர்கள் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்கள் ஏழுபேர் எல்லாவற்றையும் விட்டுவிட்டு சீனாவிற்கும் நற்செய்தியைக் கொண்டுசெல்ல முடிவுசெய்து புறப்பட்டார்கள். இது இங்கிலாந்தின் ஊடகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.
மிஷனரிகள் நற்செய்தி அறிவிக்கத் தொலைதூர இடங்களுக்குச் செல்வது ஓர் இயக்கமாக உருவெடுத்தது. இந்த எண்ணமும், இயக்கமும் லிலியாசுக்கு மிகவும் அந்நியமாகவும் விசித்திரமாகவும் தோன்றின. தொலைதூர நாடுகளுக்கு மிஷனரியாகச் செல்வது தனக்கு அப்பாற்பட்டது என்றும், தான் அதைப்பற்றிச் சிந்திப்பதற்குக்கூட தகுதியற்றவள் இல்லை என்றும் லில்லி நினைத்தார். அவருடைய இரண்டு நண்பர்கள் நற்செய்தி அறிவிக்கப்படாத இடங்களுக்கு மிஷனரிகளாகச் சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற தணியாத் தாகம் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் உண்மையாகவே தேவனோடு ஐக்கியம் கொண்டிருந்ததை லில்லி கண்டார். லில்லி அதை விரும்பினார். தான் விரும்பிய ஒன்று தன் தோழிகளிடம் இருப்பதை அவர் கண்டார். தேவனோடு நெருக்கமான ஐக்கியத்தை அவர் நாடினார், தேடினார், விரும்பினார். "தேவனே, உம்முடனான ஐக்கியத்தை நான் விரும்புகிறேன். உம் நோக்கத்தைக் காணவும், எனக்கான உம் திட்டத்தை அறியவும் நான் விரும்புகிறேன். காணும் கண்களையும், தூரப் பார்வையையும் எனக்கு அருளும்," என்று லில்லி ஜெபித்தார். படிப்படியாக அவர் மாறினார். அவர் ஜெபித்தபோதெல்லாம், வட ஆப்பிரிக்கா என்ற வார்த்தைகள் அவருடைய மனதில் வந்துகொண்டே இருந்தன. அவருக்கும் வட ஆபிரிக்காவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை; மேலும், அவர் மிஷனரியாகச் செல்வது சாத்தியமாகத் தெரியவில்லை.
4. அல்ஜீரியாவில் மிஷனரிப் பணி – பாலைவனத்தில் நற்செய்தியின் வெளிச்சம்
இலண்டனில் அவருடைய ஊழியம் விரிவாகிக்கொண்டிருந்தது. ஒருமுறை மோர்லி மண்டபத்தில் மூன்று நாட்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பலர் பேசினார்கள். ஒரு நாள் ஒரு மிஷனரி பேசினார். அவர் தான் சில நாட்களுக்குமுன்பு, வட ஆப்பிரிக்காவில் கபைல் மலைகளுக்கருகில் இருக்கும் கிராமங்களில் கிறிஸ்துவைப்பற்றி ஒருமுறைகூடக் கேள்விப்படாத மக்களுக்கு நற்செய்தி அறிவித்ததைப்பற்றிப் பேசினார். அவர் பேசி முடித்தபின், "வட ஆப்பிரிக்காவுக்கு நற்செய்தி அறிவிக்கப் போவதற்கு நீங்கள் தயாரா?" என்று கேட்டார். லில்லி உடனடியாக எழுந்து நின்று, "நான் போகிறேன்," என்றார். அந்தப் பிரசங்கியார் கேட்டது தேவனே தன்னை அழைப்பதாக லில்லி உணர்ந்தார்.
அப்போது லில்லிக்கு வயது 34. அந்த நாட்களில் மிஷனரியாகச் செல்வதற்கு 34 வயதுடையவர்கள் மிகவும் வயதானவர்களாகக் கருதப்பட்டார்கள். வட ஆப்பிரிக்காவுக்கான அழைப்பு தேவன் தனக்கு விடுத்த அழைப்பு என்று நம்பிய லில்லி வட ஆப்பிரிக்கா மிஷனுக்குத் தன் விண்ணப்பத்தை அனுப்பினார். போன வேகத்திலேயே பதில் வந்தது. அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப்பின் அவருடைய இருதயம் மிகவும் பலவீனமாக இருந்தது. மொத்தத்தில் உடல்நிலை மோசமாக இருந்தது. இரண்டாவது, ஒரு பெண் வட ஆப்பிரிக்காவுக்கு மிஷனரியாகச் செல்வது அவ்வளவு பாதுகாப்பானது இல்லை என்றும் பிறர் நினைத்திருக்கலாம். மூன்றாவது 34 வயது என்பது கொஞ்சம் அதிக வயது என்றும் அவர்கள் நினைத்திருக்கலாம். இத்தனை குறைபாடுகள் இருக்கும்போது எந்த மிஷன் அமைப்பும் தன்னை ஒரு மிஷனரியாக ஏற்றுக்கொள்ளாது என்று லில்லிக்குத் தெரியும். ஆனால், தான் ஆப்பிரிக்காவுக்கு மிஷனரியாகச் செல்ல வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை அவர் அறிந்திருந்தார். எனவே, தானே தன் சொந்தச் செலவில் வட ஆப்பிரிக்காவுக்குச் செல்ல அவர் முடிவுசெய்தார். ஒரு மருத்துவமனையில் சில அடிப்படையான பயிற்சிகளைக் கற்றார். மருத்துவத்தைக்குறித்து கொஞ்சம் தெரிந்துகொண்டார். இலண்டனில் நடந்துகொண்டிருந்த ஊழியத்தை சில நண்பர்களிடம் ஒப்படைத்தார். ஊழியத்தில் தன்னை ஊக்குவித்த, உற்சாகப்படுத்திய, உந்தித்தள்ளிய சில நல்ல நண்பர்கள் அந்தப் பொறுப்பை எடுத்தார்கள். லில்லி அல்ஜீரியாவுக்குச் செல்ல ஆயத்தமானார்.
ஒன்பது மாதங்களுக்குப்பிறகு, அதாவது 1888இல் லிலியாஸ் ட்ரோட்டெர், லூசி லூயிஸ், பிளான்ச் ஹோவர்த் ஆகிய மூன்று பெண்களும் அல்ஜீரியாவுக்கு மிஷனரிகளாகப் புறப்பட்டார்கள். துறைமுகத்துக்கு ரயிலில் பயணித்து, அங்கிருந்து கப்பலில் கிளம்பினார்கள். கப்பலைக் கரையோடு கட்டி வைத்திருந்த கயிறைக் கழற்றுகிறார்கள். நங்கூரத்தை இழுத்துக் கப்பலில் வைக்கிறார்கள். கப்பல் மெல்ல நகரத் தொடங்குகிறது. அப்போது எல்லாவற்றையும் இழந்து, தேவனை மட்டும் முற்றிலும் சார்ந்துகொள்கிற ஒரு விசித்திரமான, மகிழ்ச்சியான உணர்வு லில்லியின் உள்ளத்தை நிரப்புகிறது. சார்ந்துகொள்வதற்கும், சாய்ந்துகொள்வதற்கும் தேவன் மட்டுமே இருக்கிறார் என்ற உணர்வு. கப்பலின் கயிறைக் கழற்றிவிட்டு, நங்கூரத்தை இழுத்துவைத்து, கப்பல் நகரும் இந்த ஒப்புமையைப் பயன்படுத்து லில்லி பின்னாட்களில் இவ்வாறு எழுதினார். "டேன்டேலயன் செடி நீண்ட காலத்திற்கு முன்பே தன் தங்க இதழ்களை சமர்ப்பணம் செய்துவிட்டது; இறப்பதற்குத் தயார் என்ற முடிசூடும் நிலையை அடைந்துவிட்டது. அதை யாரும் பலவந்தமாகப் பறிக்கத் தேவையில்லை. அதை மெல்லத் தொட்டாலே விழுந்துவிடும். அதைப் பிடித்து இழுத்துப் பிடுங்கினாலும் வலியோ, வேதனையோ, பிரிவோ இல்லை. வீசும் காற்று தன் சிறிய வாழ்க்கையை எப்போது, எங்கே, எப்படிக் கொண்டுபோகும் என்று தெரியாமல், தன் சிறிய உயிரைத் தாங்கிக்கொண்டு தயாராக நிற்கிறது. அது தனக்காக வாழவில்லை, நிற்கவில்லை; பிறருக்காக, கொடுப்பதற்காக வாழ்கிறது, நிற்கிறது." அவர் அல்ஜீரியாவில் காலடி எடுத்து வைத்ததுமுதல் வாழ்நாள் முழுவதும் இதுவே அவருடைய மனப்பாங்காக இருந்தது.
அல்ஜீரியா, வட ஆப்பிரிக்காவில் உள்ள துனிசியா, லிபியா, மொராக்கோபோன்ற நாடுகளைப்போல், முழுக்கமுழுக்க ஓர் இஸ்லாமிய நாடு. அல்ஜீரியா முரண்பாடுகள் நிறைந்த ஒரு நாடு. ஒரு புறம் சகாரப் பாலைவனம்; இன்னொருபுறம் வடக்கே உயர்ந்த மலைகள்; இன்னொருபுறம் நகரங்கள் அமைந்திருக்கும் நல்ல கடலோரப்பகுதிகள். அல்ஜீரியாவில் பூர்வீக மக்கள் பெர்பர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் மலை கிராமங்களில் வாழ்ந்தார்கள். நீண்ட காலத்திற்குமுன்பே அரேபியர்கள் அல்ஜீரியாவை வென்று இஸ்லாத்தைக் கொண்டுவந்தார்கள். 1830திலிருந்து பிரான்சு அல்ஜீரியாவை ஆண்டது. இவ்வாறு, அல்ஜீரியா பலருடைய ஆட்சியின்கீழ் இருந்தது. முதலாவது நாட்டின் பூர்வீகக்குடிகளாகிய பெர்பர்கள், பின்னர் அரேபியர்கள், அதன்பின் பிரெஞ்சுக்காரர்கள். ஆனால், இஸ்லாம்தான் இந்த நாட்டை ஒன்றிணைத்தது. இஸ்லாத்தின் பிறையுடன் ஒப்பிடும்போது பிரெஞ்சுக் கொடி மிகவும் சிறியதாகிவிடும்.
இந்தக் கொந்தளிப்பான நாட்டுக்குத்தான் லிலியாசும், பிளான்சும், லூசியும் மிஷனரிகளாகப் போய்க்கொண்டிருக்கிறார்கள். ஹட்சன் டெய்லர் சீனாவுக்கும், வில்லியம் கேரி இந்தியாவுக்கும் பல மாதங்கள் கப்பலில் பயணம் செய்ததுபோல் இவர்கள் பயணிக்கவில்லை. இங்கிலாந்திலிருந்து புறப்பட்ட ஐந்து நாட்களில் அவர்கள் அல்ஜீரியாவில் வந்திறங்கினார்கள். இவர்கள் மிகவும் அப்பாவிகள் என்று சிலர் கூறுவார்கள்.
5. பயணங்கள் மற்றும் பல்வேறு சவால்கள் – கடினமான பாதைகளிலும் கர்த்தருக்காக
மூவரும் போகும் நாட்டில் பேசப்படும் அரபு மொழியில் ஒரு வார்த்தைகூட அவர்களுக்குத் தெரியாது. அந்த நாட்டின் கலாச்சாரத்தைக்குறித்தோ, இஸ்லாம் மதத்தைக்குறித்தோ எதுவும் தெரியாது. எந்த மிஷன் அமைப்போடும் அவர்களுக்குத் தொடர்பு கிடையாsது. அவர்கள் தாங்களாகவே அல்ஜீரியாவுக்குப் போகிறார்கள். சொல்லப்போனால், அந்த நாட்களில் வெளிநாடுகளைப்பற்றி மக்கள் மிகக் குறைவாகவே அறிந்திருந்தார்கள். மேலும் ஒரு சில ஆண்டுகளுக்குமுன்புதான் அல்ஜீரியாவுக்கு மிஷனரிகள் வருவதற்கு கதவு திறந்தது. வெளியேயிருந்து வந்தவர்கள் பெரும்பாலும் மலைப்பகுதிகளுக்கு மட்டுமே சென்று நற்செய்திப் பணிகள் செய்தார்கள். ஆகவே, தேவன் தங்களை அழைத்திருக்கிறார் என்று நிச்சயத்தோடும், அவர் எப்படியும் தங்களைத் திட்டவட்டமாக நடத்துவார் என்ற நம்பிக்கையோடும் அவர்கள் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கப்பலின் சாளரத்தின்வழியாக அல்ஜீரியத் துறைமுக நகரத்தை முதன்முறை பார்த்தபோது, மகிழ்ச்சியும் பேர் உவகையும் அடைந்தார்கள். ஆனால், அவர்கள் தரையிறங்கிய அந்த நிமிடத்தில் என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. "வெற்றி பெறுவோம் அல்லது எங்கள் வருகை பயனுள்ளதாக மாறும் என்ற எந்த நம்பிக்கையும் எழவில்லை," என்று அந்த நிமிடத்தைப்பற்றி லில்லி பின்னாட்களில் எழுதினார். "எந்த ஒரு மிஷன் நிறுவனத்தின் மருத்துவரும் நான் மிஷனரியாகச் செல்லத் தகுதியானவர் என்று சொல்லமாட்டார். நான் போகிற நாட்டில் ஒரு நபரைக்கூட எனக்குத் தெரியாது. அரபு மொழியில் ஒரு வாக்கியம்கூடத் தெரியாது; இதுவரை யாரும் நற்செய்தி அறிவித்திராத இந்த நாட்டில் எப்படி மிஷனரி வேலையை ஆரம்பிக்க வேண்டும் என்றும் தெரியாது. நான் வர வேண்டும் என்று மட்டுமே எனக்குத் தெரியும். தேவனுக்கு உண்மையாகவே பலவீனமானவர்கள்தான் தேவை என்றால், இதோ இங்கு இப்போது நான் இருக்கிறேன்" என்று எழுதினார்.
அவர்கள் கரையில் இறங்கியவுடன் நகரத்தில் பிரெஞ்சுக்காரர்கள் அதிகம் வாழ்ந்த பிரெஞ்சு குடியிருப்புக்குச் சென்று, வாடகைக்கு ஒரு வீட்டைக் கண்டுபிடித்து அங்கு தங்கினார்கள். இதுதான் அவர்கள் செய்த முதல் காரியம். மூன்று பெண்களும் மிகப் பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள். மூவருக்கும் வீட்டு வேலைகள் எதுவும் தெரியாது. லிலியாஸ் தன் வீட்டில் தன் அறையின் திரைச்சீலைகளைக்கூடத் திறக்க வேண்டிய அவசியமோ, சமையல் அறைக்குச் சென்று எந்த வேலையும் செய்ய வேண்டிய தேவையோ, குளிப்பதற்குத் தொட்டியில் தண்ணீர் நிரப்ப வேண்டிய தேவையோ ஏற்படவில்லை. எல்லா வேலைகளையும் செய்வதற்கு வீட்டில் ஆட்கள் இருந்தார்கள். லில்லி வீட்டில் இருந்தபோது இதுபோன்ற எந்த வேலையும் செய்ததில்லை. மூவரும் இப்படித்தான் வாழ்ந்தவர்கள். இதோ, அல்ஜீரியாவில் தனியாக வாடகை வீட்டில் தங்குகிறார்கள். எல்லா வேலைகளையும் அவர்கள்தான் செய்ய வேண்டும்.
இது முதல் தடை. இரண்டாவது, மொழி இன்னொரு தடையாக இருந்தது. சாதாரணமாகவே அரபு மொழி கற்பதற்கு அவ்வளவு எளிதான மொழி அல்ல. ஆனால், இப்போது அவர்கள் அதைக் கற்றுத்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. அவர்களிடம் ஒரு பிரெஞ்சு-அரபு அகராதி மட்டுமே இருந்தது. ஏனென்றால் மூவருக்கும் பிரெஞ்சு மொழி தெரியும். பிரெஞ்சு மொழி அவர்களுடைய தாய்மொழி இல்லையென்றாலும் பிரெஞ்சு சரளமாகப் பேசத்தெரியும். அவர்கள் அரபி மொழி கற்பிக்கும் வகுப்பில் சேர்ந்து அரபி படிக்கத் தொடங்கினார்கள். விரைவில் அரபி ஆசிரியர் நோய்வாய்ப்பட்டதால் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அரபு மொழியைத் தனியாகக் கற்பிக்க ஒருவரைத் தேடினார்கள். ஒரு வாலிபன் அவர்களுக்கு அரபு கற்பிக்க முன்வந்தான். ஆனால், அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதை அறிந்தவுடன் உயிருக்குப் பயந்து ஓடிவிட்டான். வேறு ஒருவரைக் கண்டுபிடிக்க பல மாதங்கள் ஆயின.
அவர்கள் மூன்று காரியங்களுக்காக ஜெபித்தார்கள். 1. ஒன்று, நற்செய்தி அறிவிப்பதற்கு கதவுகள் திறக்கப்பட வேண்டும்; மக்களைச் சந்திக்க வழிகள் திறக்கப்பட வேண்டும். 2. இரண்டாவது, நற்செய்தி அறிவிக்கும்போது இருதயங்கள் திறக்கப்பட வேண்டும், 3. மூன்றாவது பரலோகம் திறக்கப்பட வேண்டும்.
அவர்களுக்கு அரபு மொழி மிகவும் கொஞ்சம்தான் தெரியும். ஆயினும், அவர்கள் மக்களைச் சந்தித்து உரையாடத் தொடங்கினார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் மிக ஞானமாக நடந்தார்கள். அதாவது எடுத்த எடுப்பில் அவர்கள் பூர்வீகக் குடிகள் மட்டுமே வாழ்ந்த பகுதிகளில் மக்களைச் சந்திக்கவில்லை. அவர்கள் பிரெஞ்சுக் குடியிருப்பில் வாழ்ந்த மக்களைச் சந்தித்தார்கள். ஏனென்றால், அந்தப் பகுதியில் வாழ்ந்த பூர்வீக மக்களுக்கு பிரெஞ்சு மொழி கொஞ்சமாவது தெரியும். மேலும் அங்கிருந்த பிற ஐரோப்பியர்களுடனும் உரையாட முடியும். நாளடைவில் அவர்கள் தங்கள் வீட்டில் ஒரு கூட்டத்தைத் தொடங்கினார்கள். சுமார் 20 பேர் வரத்தொடங்கினார்கள். ஒரு வாரம் வருவார்கள்; அடுத்த வாரம் வரமாட்டார்கள். இப்படியாகப் போய்க்கொண்டிருந்தது. விடாது வருமாறு வற்புறுத்தினார்கள். தொடர்ந்து அரபு மொழி கற்றுக்கொண்டிருந்தார்கள். அதை விடவில்லை.
தங்களுடைய அரபு ஆசிரியரின் துணையோடு அவர்கள் சில வசனங்களை அரபு மொழியில் மொழிபெயர்த்தார்கள். மொழிபெயர்த்த வசனங்களை அவர்கள் உள்ளூர் உணவகங்களுக்குக் கொண்டுசென்று, அங்கிருந்தவர்களிடம் கொடுத்து, "நாங்கள் அரபு மொழி கற்க விரும்புகிறோம். இதில் என்ன எழுதியிருக்கிறது என்று வாசித்துச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார்கள். இதன்மூலம், ஒன்று அங்கிருந்தவர்கள் வேத வசனங்களைப் படிக்கும்படிச் செய்தார்கள். இரண்டு, அவர்களும் அரபு மொழியைப் பயிற்சிசெய்தார்கள். இது ஒரு புறம் நடக்க, இன்னொரு புறம் பிரெஞ்சு மொழி தெரிந்தவர்களுடன் அவர்கள் சரளமாக உரையாடினார்கள். ஆனால், இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அவர்கள் போன இடங்களிலெல்லாம் ஆண்களை மட்டுமே சந்திக்க முடிந்தது. அவர்கள் பெண்களைப் பார்க்கவோ, சந்திக்கவோ, பேசவோ இல்லை, முடியவில்லை.
வீட்டுக்கூட்டம் தொடர்ந்தது. ஆயினும், அவ்வப்போது தடைகள் ஏற்பட்டன; அவர்களுடைய வீடு பிரெஞ்சு பகுதியில் இருந்தது என்று ஏற்கெனவே சொன்னேன். அந்தப் பகுதியில் இருந்த சில குறும்புக்கார பிரெஞ்சு வாலிபர்கள் அவர்களுடைய வீட்டுக் கூட்டத்தைச் சீர்குலைப்பதை வேடிக்கையாகவும், வாடிக்கையாகவும் கருதினார்கள்.
இன்னொருபுறம், அல்ஜீரியாவின் தட்பவெப்ப நிலை அவர்களுக்கு மிகவும் கடுமையாக இருந்தது. அவர்கள் பாலைவனத்து வெயிலுக்குப் பழக்கப்பட்டதேயில்லை. எத்தனை சிரமங்கள்! தாக்குப்பிடிக்க வேண்டுமே! மூவரில் ஒருவரான லூசி லூயிஸ் இங்கிலாந்துக்குத் திரும்பிச்செல்ல முடிவு செய்தார். லிலியாசும் பிளாஞ்ச்சும் மட்டுமே அல்ஜீரியாவில் தங்கினார்கள். இவர்கள் இருவருடைய உறவும், ஐக்கியமும் பல தசாப்தங்களாக நீடிக்கும் என்று அப்போது அவர்களுக்குத் தெரியாது.
6. அகோரமான சவால்கள் – நம்பிக்கைக்காக எதிர்கொண்ட இடர்கள்:
ஆரம்ப ஆண்டுகளில், எதிர்மறையான பாதகமான சூழ்நிலையிலும் இருவருடைய நம்பிக்கையும், எதிர்பார்ப்பும், தாகமும், வேகமும், பாரமும் எந்த வகையிலும் குறையவில்லை, வற்றவில்லை, தணியவில்லை. அவர்கள் தளரவில்லை. எத்தனையோ காரியங்களும், நிகழ்ச்சிகளும் அவர்களுடைய தாகத்தையும், பாரத்தையும், நம்பிக்கையையும் சிதைத்திருக்க முடியும்; அவர்கள் சோர்ந்துபோயிருக்க முடியும்; லூசி லூயிசைப்போல் நாட்டுக்குத் திரும்பிப்போயிருக்க முடியும். கூட்டங்களும், நிகழ்சிகளும் ஏற்பாடுசெய்தபோது சில வேளைகளில் பலர் வரவில்லை. அந்த நேரங்களில், லில்லி தெருக்களுக்குச் சென்று கூட்டத்துக்கு வருமாறு மக்களை அழைத்தார். கூட்டங்களுக்கு வந்தவர்களுக்கு அன்போடு விருந்து பரிமாறினார். அரேபிய சிறுவர்களுக்கு இலவச உணவு கொடுத்து வரவேற்றார். இந்தக் கூட்டங்கள் நாளடைவில் வேதபாட வகுப்பாக மாறிற்று. கூட்டத்தில் கலந்துகொண்ட சில வாலிபர்கள் சில நேரங்களில் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். லில்லி மளிகைக்கடை, பெட்டிக்கடை, டீக்கடை என கடைகடையாக ஏறியிறங்கினார்; அரபு மொழியில் மொழிபெயர்த்துவைத்திருந்த வேத வசனங்களைக் கொடுத்து படிக்கச்சொன்னார்; அக்கம் பக்கத்திலிருந்த குடியிருப்புகளில் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்தார்.
மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்றோ, எந்தப் போக்கில் பயணித்து நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்றோ தெரியவில்லை. ஆனால், லில்லி தொடர்ந்து விதைத்தார். எல்லா வழிகளிலும் தேவனுடைய வார்த்தையை விதைத்துக்கொண்டேயிருந்தார்.
இவ்வளவு பரபரப்பான வேலைகள் இருந்தபோதும் அவர் ஒவ்வொரு நாளும் தேவனோடு தனியாக ஒரு மணிநேரம் ஐக்கியம்கொள்வதற்குத் தவறவில்லை. அவர் அதில் உறுதியாக இருந்தார். அவருடைய வீட்டுக்கு அருகே ஒரு சிறிய காடு இருந்தது. அவர் ஒவ்வொருநாளும் அந்தக் காட்டுக்குச் சென்று, யாருடைய கண்ணிலும் படாமல், தனியாக அமர்ந்து வேதாகமத்தை வாசித்தார். அந்த நேரங்களில் காட்டிலிருந்த சின்னச்சின்ன விஷயங்கள், சின்னச்சின்ன விவரங்கள், சின்னச்சின்ன காட்சிகள்மூலம் தேவனுடைய பேசுதலை அவர் கவனித்தார். இயல்பால் அவர் ஒரு கலைஞர், ஓர் ஓவியர். எனவே, சின்னச்சின்ன காரியங்களில்கூட அவர் தேவனுடைய அசைவைக் கவனித்தார்.
அவருடைய ஆரம்ப முயற்சிகள் வீணாகவில்லை. அஹ்மத் என்பவர்தான் அவர்கள் நற்செய்தி அறிவித்ததின் விளைவாக கிறிஸ்தவராக மாறிய முதல் அரேபியர். அவர்கள் வீடு வீடாகச் சென்று விநியோகித்த சில துண்டுப் பிரசுரங்களையும், சில சிறு சுவடிகளையும், கையேடுகளையும் படித்தபின் அவர் கிறிஸ்தவரானார். பெரும் கொண்டாட்டத்துடன் ஓர் ஆற்றில் அஹ்மதுக்கு அவர்கள் ஞானஸ்நானம் கொடுத்தார்கள். சில நாட்களுக்குப்பிறகு, அஹ்மது அவர்களுடைய வீட்டிற்கு வந்தார். அவருடைய உடலிலும், உடையிலும் இரத்தம். அவர் கிறிஸ்தவரானதைக் கேள்விப்பட்ட 18பேர் சேர்ந்து அவரைத் தாக்கினார்கள். முதற்பலன். ஒரு இஸ்லாமிய நாட்டில் நற்செய்தி அறிவிக்கும்போது என்ன நடக்கும் என்பதை லில்லி முதல்முறையாகக் கண்டார். அஹ்மத் தன் உயிரைக் காப்பதற்காகத் துனிசியாவிற்குத் தப்பி ஓடினார்.
அங்கு இஸ்லாம் மக்களை அழுத்தமாகவும், ஆழமாகவும் இறுக்கிப்பிடித்திருந்தது அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. மக்களுடைய வாழ்க்கையின் சட்டம், கல்வி, சமூகம், வீடு என எல்லா நிலைகளிலும் இஸ்லாம் ஊடுருவிப் பரவியிருந்தது. இஸ்லாம் மதம்தான் எல்லாவற்றையும் வரையறுத்தது. அவர்களுடைய பண்டிகை நாட்கள், விரதநாட்கள், விடுமுறை நாட்கள் எல்லாவற்றையும் இஸ்லாம் மதமே நிர்ணயித்தது. ஒரு நாளில் ஐந்து வேளை தொழுகைசெய்தல், ரமலான் நோன்பைக் கடைபிடித்தல், புனித யாத்திரைகள் செல்லுதல், அன்னதானம் வழங்குதல்போன்ற புறம்பான மதச் சடங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெண்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது. அவர்கள் ஏறக்குறைய வாழ்நாள் முழுவதும் ஆண்களின் அடிமைகளாகவே வாழ்ந்தார்கள். 10 வயதிலிருந்தே அவர்கள் முக்காடு போட வேண்டியிருந்தது; பொதுவெளியில் தனியாக இருக்க அனுமதிக்கப்படவில்லை. இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டார்கள்; கணவன் விரும்பவில்லையென்றால் மனைவியை மிக எளிதாக விவாகரத்து செய்துவிடலாம்; அதனால் கைவிடப்பட்ட பெண்கள் அதிகம் இருந்தார்கள். 19 அல்லது 20 வயதிலேயே விவகாரத்துசெய்யப்பட்ட பெண்கள் பல குழந்தைகளோடு நிர்க்கதியாக நின்றார்கள். கணவனோடும், பிள்ளைகளோடும் வாழ்ந்த பெண்களுக்கும் சொல்லத்தக்க சுதந்திரம் எதுவும் கிடையாது. அவர்கள் வீட்டிற்கு வெளியே தனியாக வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இதுதான் அன்று அங்கு பெண்களின் பரிதாபமான நிலைமை.
லில்லியோடும், பிளாஞ்சியோடும் இங்கிலாந்திலிருந்து ஹெலன் ஃப்ரீமேன் என்ற இன்னொரு அன்பான தோழி வந்து இணைந்துகொண்டார். போகப்போக இங்கிலாந்திலிருந்து இன்னும் சில பெண்கள் வந்து அவர்களோடு சேர்ந்துகொண்டார்கள். அவர்களுடைய நற்செய்திக்குழு இவ்வாறு விரிவடைந்தது. இதனால், லில்லி தான் அல்ஜீரியாவில் செய்ய நினைத்த, ஆனால் இதுவரை செய்யாத, நற்செய்திப் பணியைச் செய்யப் புறப்பட்டார். அவருக்குள் ஒரு பெரிய ஏக்கம் இருந்தது. அந்த வைராக்கியம் அவருக்குள் எரிந்துகொண்டிருந்தது. ஆம், இயேசுவின் பெயரை இதுவரை ஒருமுறைகூட கேள்விப்பட்டிராத மலைக் கிராமங்களுக்கு, பாலைவனத்திற்கு, உள்நாட்டிற்கு நற்செய்தியைக் கொண்டுசெல்ல வேண்டும் என்பதே அவருடைய ஏக்கம். இது சாதாரணமான சாதனையல்ல. லிலியாசுக்கு அப்போது சுமார் 40 வயது. அது மிக மிகக் கடினமான பயணம். பாலைவனத்தில் தேசீய நெடுஞ்சாலை கிடையாது; பாதையே தெரியாது. வழிகாட்டிகளின் உதவியோடும், துணையோடும்தான் பாலைவனத்தில் பயணிக்க முடியும். வழிகாட்டிகள் பெரும்பாலும் குடிபோதையில் இருந்தார்கள். அவர்களுடைய தயவு இல்லாமல், பாலைவனத்தில் ஓர் அடிகூட எடுத்துவைக்க முடியாது. இவர்களை நம்பித்தான் பயணம். சில இடங்களில் எப்போதாவது ரயிலில் பயணித்தார்கள். பெரும்பாலும் ஒட்டகத்தில்தான் பயணிக்க வேண்டும். பாலைவனத்தில் மணல் புயல் வீசும்; சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வதைக்கும்; கொண்டுசெல்லும் உணவுப் பொருட்கள் வழியிலேயே தீர்ந்துவிடும்; பற்றாக்குறையைச் சமாளிக்க வேண்டும்; அருகில் இருக்கும் ஒரு கிராமத்துக்குப் போய்ச் சேரும்வரை ஒன்றும் செய்யமுடியாது. அவர்களுடைய பயணம் எப்படியிருந்திருக்கும் என்பதை உங்களுடைய கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். அவர்கள் இங்கிலாந்தில் வாழ்ந்த வாழ்க்கையையும், அனுபவித்த வசதிகளையும், பழகியிருந்த பழக்கங்களையும் இப்போதைய வாழ்க்கையையும், வசதிகளையும், பழக்கத்தையும் ஒரு நிமிடம் உங்கள் கண்முன் நிறுத்துங்கள். பாலைவனப் பயணத்தின்போது இரவில் திறந்தவெளியில் திறந்த வானத்தின்கீழ் நட்சத்திரங்களைப்பார்த்துக்கொண்டே உறங்கினார்கள்.
சென்ற இடமெல்லாம் அவர் அழகைப் பார்த்தார்; பாலைவனத்தின் காட்சிகளை அப்படியே வரைந்தார். வீசும் மணல் புயலையும், சுட்டெரிக்கும் வெயிலையும், ஒட்டகப் பயணத்தையும், மலைக் கிராமங்களையும் உள்ளூர் மக்களையும் அவர் ரசித்தார்; அழகை வரைந்தார். இவைகளையெல்லாம் அவர் வேறு யாருக்காகவும் செய்யவில்லை, தனக்காகவே செய்தார்; தனது பத்திரிகைகளில் வரைந்துள்ளார். அவர் தான் ரசித்த, அனுபவித்த, தன்னைக் கவர்ந்த அழகை ஓவியங்களாக வரைந்தார். "தொலைதூர கிராமங்களுக்குச் சென்று நான் அங்கு என்ன செய்யப்போகிறேன் என்று எனக்குத் தெரியாது. என் ஒவ்வொரு நடையையும் தேவன் நடத்துகிறார் என்றும், நடத்துவார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். அவர் வழிகாட்டுவார், வழிநடத்துவார் என்று எனக்குத் தெரியும்," என்று அவர் பின்னர் எழுதினார்.
அவர்கள் ஒரு கிராமத்திற்குச் சென்றார்கள். ஒருவர் லில்லியிடம் வந்து, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். உடனே லில்லி, "நான் அரேபியர்களை அல்ஜீரியர்களை நேசிக்கிறேன்; நான் உங்களுடன் பேச வந்திருக்கிறேன்," என்று பதிலளித்தார். அவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். அவர்கள் லில்லியை உள்ளே அழைத்துகொண்டுபோனார்கள். லில்லி தான் கையோடு கொண்டுபோயிருந்த சிறு படப் புத்தகங்களைப் பயன்படுத்தி அவர்களோடு நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டார். அந்த நாட்களில் மக்கள் புத்தகங்களையும், தாள்களையும், கையேடுகளையும், துண்டுப்பிரசுரங்களையும் விரும்பினார்கள். ஏனென்றால், அது அன்று மிகவும் அரிதான ஒன்று. அல்ஜீரியர்களுக்கு அன்று இன்னொரு அரிய காரியம் வெள்ளைக்காரர்கள். அதற்குமுன் அவர்கள் வெள்ளைக்காரர்களைப் பார்த்ததில்லை. எனவே, குழந்தைகளும், பெண்களும் அவர்களைத் தொட்டுப்பார்த்தார்கள், அவர்களுடைய முடியை இழுத்தார்கள், அவர்களுடைய ஆடையை விசித்திரமாகப் பார்த்தார்கள்.
சில இடங்களில், பெண்கள் லிலியாசையும், பிளாஞ்சையும் சுற்றிக் கூடி நின்று, "நீங்கள் இஸ்லாத்திற்கு மாறுங்கள்," என்று கெஞ்சினார்கள். அவர்கள் முஹம்மதுவை நம்பவில்லை என்று அறிந்து அதிர்ச்சியடைந்தார்கள். லில்லியும், பிளாஞ்சும் சென்ற இடமெங்கும் நற்செய்தி அறிவித்தார்கள். எல்லா இடங்களிலும் நற்செய்தி விதையை விதைத்தார்கள். தேவன் இதை ஒருநாள் விளையைச்செய்வார் என்று அவர்கள் உறுதியாக நம்பினார்கள்.
லிலியாஸ் தொலைநோக்கு பார்வையுடையவர், தூரப்பார்வையுடையவர். இன்றைக்கு ஏதொவொன்றைச் செய்வதில் அவர் திருப்தியடைபவர் இல்லை. தன் செயல்களுக்கு இன்னும் 5 வருடம், 10 வருடம் கழித்து என்ன விளைவு ஏற்படும் என்று சிந்தித்துப்பார்ப்பவர். அல்ஜீரியாவிலும் அவர் அப்படியே சிந்தித்துச் செயல்பட்டார். அவர்கள் அப்போது பிரெஞ்சு குடியிருப்பில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தார்கள். ஆனால், அல்ஜீரியர்களுக்கு நற்செய்தி அறிவிப்பதற்காக எப்படியாவது பழைய நகரமாகிய காஸ்பாவில் உள்ளூர்வாசிகளின் குடியிருப்பில் வாழவேண்டும் என்பதே அவர்களுடைய கனவு. ஐந்து ஆண்டுகளுக்குப்பிறகு 1893 இல், Number Two Rue du Croissant என்ற 300 ஆண்டுகள் பழமையான கோட்டைபோன்ற ஒரு வீட்டைக் கண்டுபிடித்து அதை விலைக்கு வாங்கினார்கள். அதில் மொத்தம் 28 அறைகள் இருந்தன. அதில் 25 அறைகள் வாழத் தகுதியான நிலைமையில் இருந்தன. பிரெஞ்சு குடியிருப்பிலிருந்து வெளியேறி அவர்கள் அவர்களுடைய கனவுப் பகுதியில் குடியேறினார்கள். அந்தக் கோட்டை அரேபியர்கள் வாழ்ந்த குடிசைகளின் அருகே இருந்தது. இதுதான் அவர்கள் வாழ விரும்பிய இடம். அன்று இந்த இடத்தில் ஐரோப்பியர்கள் வாழவில்லை. இவர்கள் அங்கு வாழ்வது அங்கிருந்த அரேபியர்களுக்கு நன்றாகத் தெரியும்.
இந்தக் கோட்டையே அவர்களுடைய ஊழியத்தின் அடித்தளமாகவும், பல ஆண்டுகளுக்கு தலைமையகமாகவும் மாறிற்று. உள்ளூர் அரேபியர்களை அணுகுவதற்கு இது பேருதவியாக அமைந்தது. இங்குதான் சந்தைகளில் வேலைசெய்தவர்களுக்கும், சிறுவர்களுக்கும் ஞாயிறு வகுப்புகள் நடத்தப்பட்டன. இதுதான் அவர்களுடைய முதல் பயிற்சிக்கூடமாக மாறிற்று. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என எல்லாரோடு தொடர்பை ஏற்படுத்தினார்கள்.
லிலியாசின் இருதயம் ஏற்கெனவே மிகவும் பலவீனமாக இருந்தது. இப்போது அல்ஜீரியாவில் இடைவிடாத கடினமான உழைப்பு. மக்களைத் தொடர்ந்து சந்தித்தார்; கூட்டங்கள் நடத்தினார். சமீபத்தில் வாங்கின பாழடைந்த கோட்டையைப் புதுப்பித்துக்கொண்டிருந்தார். உடல்நலம் குன்றியது. இதனால் அவர் இடையிடையே சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஓய்வெடுக்க எங்காவது செல்லவேண்டிய தேவை ஏற்பட்டது. சில நேரங்களில் அவர் இங்கிலாந்துக்கும், வேறு சில நேரங்களில் வேறு சில ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றார். எந்த அளவுக்கு அவர் பலவீனமாக இருந்தார் என்றால், வேலை செய்துகொண்டிருக்கும்போது சோர்வடைந்து, பின்னர் சரிந்துவிடுவார். கூட இருந்தவர்களும், பணிபுரிந்தவர்களும் லில்லியை அன்போடு கடிந்துகொண்டார்கள். அவர் தன் உடல்நலத்தில் கொஞ்சம் கூடுதலாகக் கவனம் செலுத்துமாறு வற்புறுத்தினார்கள். ஆனால், லில்லி அதைப் பொருட்படுத்தாமல் எப்போதும்போல ஊழியத்தில் மும்முரமாக ஈடுபட்டார். அவர் தனக்கு உடல்நலம் சரியில்லை என்று ஒருபோதும் நினைக்கவில்லை. அவர் தன்னை நல்ல ஆரோக்யமானவராகவே கருதினார், வேலைசெய்தார். இதற்குமேல் உழைக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டபோதுதான் வேலையைச் சற்று நிறுத்தினார். அவரோடு நெருக்கமாகப் பணிபுரிந்தவர்கள், அவரைப்பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். ஏனென்றால், அவர் அவ்வளவு ஆர்வமாகவும், சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும், தைரியமாகவும் வேலைசெய்தார். அவரைப் பார்த்த அந்நியர் ஒருவர்கூட அவர் உடல்நலம் குன்றியவர் என்று சொல்ல முடியாத அளவுக்கு அவர் வேலைசெய்தார். ஆயினும், வேலைசெய்துகொண்டிருந்தபோதே பல வேளைகளில் சரிந்துவிடுவார். எனவே, அவருக்கு ஓய்வு தேவைப்பட்டது. ஓய்வு காலங்களையும் அவர் பயன்படுத்தினார்.ஒன்று கொஞ்சம் உடல்நலம் தேறினார். இரண்டு, அந்த நேரத்தில், தேவனோடு தன்னந்தனியாக இருக்கவும், அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவும் எப்படியாவது, இரண்டு வாரங்கள் எடுத்துக்கொண்டார். மூன்று தன்னையும், தன் பணிவிடையையும் சீர்தூக்கிப்பார்க்கவும், சிலரைச் சந்தித்து அல்ஜீரியாவில் நடப்பதை விவரித்துச் சொல்லவும் பயன்படுத்தினார்.
அவர் ஓய்வுக்காக இங்கிலாந்துக்கு அல்லது ஐரோப்பாவுக்குச் சென்றபோது, அவ்வப்போது மாநாடுகளில் கலந்துகொண்டு, வட ஆப்பிரிக்காவில் என்ன நடக்கிறது என்பதைப்பற்றி மக்களிடம் எடுத்துரைத்தார். அதனால் கிளர்ந்தெழுந்த சிலர் அல்ஜீரியாவில் ஊழியத்துக்குத் தங்களை ஒப்புக்கொடுத்தார்கள். பின்னர் அவர்களோடு வந்து சேர்ந்துகொண்டார்கள். இவ்வாறு, இரண்டு மூன்று மாத ஓய்வுக்குப்பிறகு அவர் புத்துயிர் பெற்று மீண்டும் அல்ஜீரியாவுக்குத் திரும்பினார். அதே வேகத்தோடு, அதே வைராக்கியத்தோடு, அவர் தன் பணியைத் தொடர்ந்தார்.
லிலியாஸ் பாலைவனத்தை நேசித்தார். மக்கள் பொதுவாக பசுஞ்சோலைகளையும், கடற்கரைகளையும், பூங்காக்களையும் நேசிப்பார்கள். இவரோ சுடுமணல் நிறைந்த, அனல்காற்று வீசுகிற, ஒதுங்குவதற்கு நிழல்கூட இல்லாத, சுட்டெரிக்கும் வெயில் அடிக்கும் பாலைவனத்தை நேசித்தார். இந்தக் கடுமையான பாலைவனப் பயணங்களால் பிறர் மனமடிவடைவார்கள், தொய்ந்துபோவார்கள்; ஆனால், லிலியாஸ் புத்துயிர் பெற்றார். அவர் இந்தப் பாலைவனத்தைப்பற்றி, "ஓ, பாலைவனம்! அமர்ந்திருக்கும் பாலைவனம்,ஓய்ந்திருக்கும் பாலைவனம் எத்தனை அழகு! எல்லாவற்றின்மேலும், எல்லாவற்றினூடாகவும் அசைவாடும் அமைதி தேவனால் நிறைந்திருக்கிறது; தேவன் தம் மக்களுக்குத் தம் வழிகளைக் கற்பிக்க அவர்களை வனாந்தரத்திற்கு அழைத்துச் சென்றது ஆச்சரியமில்லை. அரபியக் குடியிருப்பின் கூட்ட நெரிசலிலிருந்தும், ஆரவாரத்திலிருந்தும், அமர்க்களத்திலிருந்தும் விலகி பாலைவனத்தில் அமர்ந்திருப்பது எத்தனை இன்பம்," என்று எழுதினார். அவர் அமர்ந்திருப்பதையும், வெப்பத்தையும் விரும்பினார். அரேபியர்கள்கூட பாலைவனம் ஒரு பயங்கரமான, ஆபத்தான இடம் என்று ஒப்புக்கொள்வார்கள். அவர்கள்கூட பாலைவனத்தின் கடுமையைக் கண்டு பயந்தார்கள். "நீ சாக வேண்டும் என்று எழுதியிருந்தால், இங்குதான் சாவாய்," என்று அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்.
அவர்களுடைய பாலைவனப் பயணங்கள் சவால்களும் சிக்கல்களும் சிரமங்களும் நிறைந்தவை. இருவரும் அடிக்கடி காய்ச்சலால் அவதிப்பட்டார்கள். திறந்த வெளியில் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டே உறங்கினார்கள். சூடான, கலங்கிய சேற்று நீரைக் குடிக்க வேண்டும். சாப்பாடு தீர்ந்துபோகும்; பசியோடு பயணிக்க வேண்டும். சென்ற இடங்களிலெல்லாம் கிராமவாசிகள் அவர்களை எப்போதும் மனமுவந்து வரவேற்கவில்லை; விருந்தோம்பல் செய்யவில்லை; ஏற்றுக்கொள்ளவில்லை. சில நேரங்களில் சில கிராமங்களில் மக்கள் கத்திக்கூச்சலிட்டு அவர்களைக் கிராமத்தைவிட்டு விரட்டினார்கள். வேறு சில கிராமங்களில், "நீங்கள் வெள்ளையாக இருக்கலாம். ஆனால், எங்கள் இருதயம் ஏற்கெனவே வெள்ளையாக இருக்கிறது," என்று மக்கள் கூக்குரலிட்டார்கள். இன்னும் சில கிராமத்தார், "நாங்கள் முஹம்மதுவின் சாட்சி, நீங்கள் எங்களுக்கு யார்? நீங்கள் ஒருபோதும் நோன்பைக் கடைப்பிடிப்பதில்லை. நீங்கள் பிரார்த்தனை செய்வதில்லை. பரலோகத்திற்கான பாதை எங்களுக்குத் தெரியும். உங்களுடைய புதிய பாதை எங்களுக்குத் தேவையில்லை," என்று கூச்சலிட்டார்கள். இவைகளோடுகூட கிராமங்களின் நிலைமையைப்பற்றிச் சொல்லவே வேண்டாம். கடுமையான வறுமை, தெருவெங்கும் நாய்கள், சொல்லமுடியாத அழுக்கு, துர்நாற்றம், கிழிந்த, கந்தைகளோடு குழந்தைகள், கத்திக் கூச்சலிடும் குழந்தைகள் - இதுதான் அன்றைய அல்ஜீரியக் கிராமம். இவைகளையெல்லாம் பார்த்தபிறகு, "ஆண்டவராகிய இயேசு கலிலேயாவில் கிராமம் கிராமமாகப் பயணம் செய்தபோது எப்படியிருந்திருக்கும் என்பதை நான் இப்போது கொஞ்சம் புரிந்துகொள்கிறேன்," என்று அவர் எழுதினார்.
ஒருமுறை, ஒரு பயணத்தின்போது, உணவுப்பொருட்கள் தீர்ந்துபோனதால், அவர்களுடைய வழிகாட்டி அப்துல்லா மட்டும் பக்கத்தில் இருந்த கிராமத்துக்குச் சென்று ஒரு கொழுத்த வெள்ளைக் கோழியைக் வாங்கிக்கொண்டு பெருமிதத்தோடு திரும்பிவந்தார். அவர் அந்தக் கோழியின் கால்களை ஒட்டகத்தின்மேலிருந்த சேணப் பைபையோடு சேர்த்துக்கட்ட முயன்றார். அந்தக் கோழி உயிர்போவதுபோல் வேதனையோடு கத்தியது. அதன் அலறலை பிளாஞ்சால் சகிக்க முடியவில்லை. கோழி தன் கதறலை நிறுத்தவில்லை. எனவே, பிளாஞ்ச், "அப்துல்லா, நிறுத்து. வேண்டாம்," என்றார். அப்துல்லா கோழியை அவிழ்த்தார். அந்தப் பயணம் முழுவதும் பிளாஞ்ச் கோழியை மடியில் வைக்க முடிவு செய்தார். ஆம், பிளாஞ்ச் ஒட்டகத்தில் அமர்ந்து பயணித்தபோது, கோழி அவருடைய மடியில் உட்கார்ந்து பயணித்தது. நிச்சயமாக, அதன்பிறகு அவர்கள் அந்தக் கோழியைச் சமைத்துச் சாப்பிடவில்லை. பிளாஞ்ச் கோழியை நன்றாகக் கவனித்துக்கொண்டார். கோழி அவருக்கு அருகில் படுத்துத் தூங்குவது வழக்கமாயிற்று. கூடவே பயணித்தது. முட்டை போடத் தொடங்கியது; சில சமயம் பாலைவனத்தில் மணலில், வேறு சில நேரங்களில் ஒட்டகத்தில் பயணிக்கும்போது.
லிலியாசும் பிளாஞ்சும் கபல்லோ மலைகளில் இருந்த கிராமங்களுக்கும் சென்றார்கள். இதுவரை ஒருமுறைகூட இயேசு என்ற பெயரைக்கூட கேள்விப்படாதவர்களுக்கு இயேசுவைப்பற்றியும், அவருடைய மரணம், உயிர்த்தெழுதலைப்பற்றியும் சொல்வதில் அவர் பேருவகை கொண்டார். அதில் இருக்கும் பேரின்பத்தைக்குறித்து அவர் தன் நாட்குறிப்பில் எழுதினார். பாலைவனப் பயணம் ஒருவகையில் பயங்கரமானது என்றால், மலைப் பயணம் இன்னொரு வகையில் ஆபத்தானது. மலைக் கிராமங்களை அடைவதற்கு அவர்கள் பெருக்கெடுத்து ஓடிய ஆறுகளைக் கடக்க வேண்டியிருந்தது. அவர்களாகவே ஆறுகளைக் கடக்கமுடியாதபோது, வழிகாட்டிகளின் தோள்களில் தொங்கியபடி ஆறுகளைக் கடந்தார்கள். ஆறுகளைக் கடந்து, குறுகலான மலைப்பாதைகளில் பயணிக்க சில நேரங்களில் கழுதைகளைப் பயன்படுத்தினார்கள். பல இடங்களில் கழுதைகள்கூட நடக்கமுடியாத அளவுக்குப் பாதைகள் மிகவும் செங்குத்தாக இருக்கும். செங்குத்தான பாதைகளில், பாறைகளில், மெல்ல மலையேறினார்கள். இத்தனை இன்னல்களுக்கிடையில் காட்டு நாய்களையும் சமாளிக்க வேண்டும். எல்லாவற்றுக்கும்மேலாக, மலையின் வானிலையை ஒருபோதும் கணிக்கமுடியாது. கிறிஸ்து அறிவிக்கப்படாத மக்களுக்குக் கிறிஸ்துவைக் கொண்டுசெல்கிறார்கள்.
ஒருமுறை அவர்கள் இப்படிப்பட்ட இன்னல்களையும், இடர்களையும், தாண்டி ஒரு மலைக்கிராமத்துக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் கண்ட அகோரக் காட்சியினால் ஆடிப்போய்விட்டார்கள். அந்த மலைக்கிராமம் மிக மோசமான நிலைமையில் இருந்தது. கிராமம் அடியோடு அழிந்துபோயிருந்தது என்று சொல்லலாம். பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டு குடிசைகள் மண்ணுக்குள் புதைந்துகிடந்தன; பெரும் பாறைகள் உருண்டுவந்து அங்கிருந்த எல்லாவற்றையும் அடித்து நொறுக்கியிருந்தன. அவர்கள் இந்த நிலைமையிலிருந்து மீண்டுவருவதற்கு அவர்களிடம் எந்தவிதமான வளங்களும் கிடையாது. கிராமத்தின் பரிதாபமான நிலைமையும், வறுமையும், மக்களின் நம்பிக்கையின்மையும் கண்கூடாய்த் தெரிந்தது. இவருடைய உள்ளம் உடைந்தது. லிலியாஸ் தான் பார்த்த முதல் பெண்ணிடம், "நாங்கள் உங்களைப் பார்க்க வந்திருக்கிறோம்," என்று கூறினார். அதற்கு அந்தப் பெண், “இங்கு பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? பாறைகளும், சேறும், நிலச்சரிவில் காணாமல்போன குடிசைகளும், வறுமையும், நம்பிக்கையின்மையும்தான் இருக்கிறது. வேறு என்ன இருக்கிறது?" என்று பதில் சொன்னார். ஒரு வாலிபன், “கடவுளுக்கு எங்களைக்குறித்து எந்த எண்ணமும் இல்லை. அப்படியிருக்கும்போது அவருக்கு எங்களைக்குறித்து என்ன கவலை இருக்க முடியும்? நாங்கள் வாழ்வதற்கு எந்தக் காரணமும் இல்லை. ஏனென்றால், இங்கே சாணியும், சேறும் சகதியும்தான் இருக்கிறது. பரலோகம் என்று ஒன்று இருக்கிறதா என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், நரகம் என்று ஒன்று இருக்கும் என்று தெரிகிறது. இதோ, நாங்கள் நரகத்தில்தான் இருக்கிறோம். நாங்கள்தான் சாட்சி," என்று சொன்னான். ஒரு பெண் ஒரு கைக்குழந்தையுடன் நிற்பதைப் பார்த்த லிலியாஸ், “நீ உன் குழந்தையை நேசிக்கிறாயா?" என்று வினவினார். அதற்கு அந்தப் பெண், “ஆம், நான் என் குழந்தையை மிகவும் அதிகமாக நேசிக்கிறேன். நான் விதவை. என் மகள் எனக்கு என் கண்கள்போன்றவள்,” என்றாள். உடனே லிலியாஸ், "நீ உன் மகளை நேசிப்பதுபோலவே தேவனும் உங்களை நேசிக்கிறார். இன்னும் சொல்லப்போனால், நீ உன் மகளை நேசிப்பதைவிட தேவன் உன்னை அதிகமாக நேசிக்கிறார். உன் மகள் உனக்கு உன் கண்கள்போன்றவள் என்றால் நீங்கள் தேவனுக்கு அவருடைய கண்களைப்போன்றவர்கள்," என்று பதில் சொன்னார். இதைக் கேட்டுக்கொண்டே அந்தப் பெண் போய்விட்டார்.
லிலியாசும் பிளாஞ்சும் அடுத்த மலைக்கிராமத்துக்குச் சென்றார்கள். அங்கு அவர்கள் மக்களைச் சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு சிறுவன் லிலியாசையும், பிளாஞ்சியையும் சுட்டிக்காட்டி, “கடவுள் நம்மைத் தம்முடைய கண்களைப்போல் நேசிக்கிறார் என்று இந்த வெள்ளைக்காரர்கள் சொன்னார்கள்," என்று சொன்னான்.
இவ்வளவு கடுமையான உழைப்புக்கேற்ற பலனை அவர்கள் காணவில்லை. பலர் கிறிஸ்தவர்களானார்கள். உண்மை. அவர்கள் பட்ட பிரயாசம் பெரிது. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் சித்திரவதைக்குள்ளானார்கள்; அவர்கள் சந்தித்த சவால்கள் அதிகம். குறிப்பாக ரமலான் மாதத்தில் ஒருவன் நோன்பு இருக்கவில்லையென்றால், அவன் தன் நிலைப்பாட்டை ஊராருக்குப் பறைசாற்றுகிறான் என்று பொருள். ஒருவன் திருவிருந்தில் பங்குபெறும்போது, அதாவது அப்பத்தில் புசித்து, திராட்சைரசத்தைப் பருகும்போது, அவன் தான் ஒரு கிறிஸ்தவன் என்று அறிவிக்கிறான் என்பதை மக்கள் புரிந்துகொண்டார்கள். பந்தியில் பங்குபெறுவது ரமலான் நோன்பை மீறுவதாகக் கருதப்பட்டது. இந்த எளிமையான கிறிஸ்தவ ஒழுங்குமுறை இஸ்லாமிய நாட்டுக்கு எதிரான செயலாகவும், கிறிஸ்தவ விசுவாசத்தின் பிரகடனமாகவும் கருதப்பட்டது. எனவே, புதிய விசுவாசிகள் தடுமாறினார்கள், இடறினார்கள். புதிய விசுவாசிகளை விசுவாசத்தில் நிலைநிறுத்த, உறுதிப்படுத்த லிலியாசும், அவருடைய குழுவினரும் மிகவும் கடினமாக முயன்றார்கள். குறிப்பாக ரமலான் மாதத்தின்போது திருவிருந்து என்று பகிரங்கமாக நடத்தாமல் காபி நேரம் என்று மாற்றி அப்பம் பிட்டார்கள். ஆனாலும் எல்லாம் சுமுகமாகச் செல்லவில்லை. ஒருமுறை ஒரு புதிய விசுவாசி, ஓர் இளம் பெண், லிலியாசிடம், "உங்களுக்கு ஏன் இந்த விஷயங்கள் புரிவதில்லை? அல்லது புரியவில்லையா? நாங்கள் ரமலான் நோன்பை முறித்தால், பொதுமக்கள் எங்களை அவமானப்படுத்துவார்கள். யாரும் எங்களுக்கு வீடு வாடகைக்குத் தரமாட்டார்கள். நாங்கள் வாங்கவோ விற்கவோ முடியாது. கடைகளில் எங்களுக்கு யாரும் எதையும் தரமாட்டார்கள். தெருக்களில் எங்களைப் பகிரங்கமாக அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்துவார்கள்; சமுதாயத்திலிருந்து எங்களைத் தள்ளிவைத்துவிடுவார்கள்," என்று கூறினாள். இவைகளெல்லாம் லிலியும் அவருடைய குழுவினரும் அறியாததல்ல. ஆம், புதிய கிறிஸ்தவர்கள் மிகப் பெரிய விலை செலுத்த வேண்டியிருந்தது. அல்ஜீரியாவில் வாழ்ந்த இப்படிப்பட்ட பெண்களுக்கு ஊழியம்செய்யவே கர்த்தர் தன்னை அளித்திருப்பதாக லில்லி உணர்ந்தார். ஆனால், அவர்களை அவ்வளவு எளிதில் அணுக முடியவில்லை.
பெண்களை எப்படி எளிதாக அணுகலாம் என்பதற்கான வழியை லில்லி தேடிக்கொண்டிருந்தார். குழந்தைகள்மூலமாக அவர்களை அணுக ஆரம்பித்தார். பெண்கள் தங்கள் வீடுகளுக்கு இடையில் இருக்கும் ஒதுக்குப்புறமான முற்றங்களில் கூடிவருவதை லில்லி கண்டுபிடித்தார். அந்த முற்றத்தில் அவர்கள் அடிக்கடி ஒன்றாகக் கூடுவதையும், சமைப்பதையும், குழந்தைகளைப் பார்த்துக்கொள்வதையும், நேரத்தைச் செலவிடுவதையும் அவர் கேள்விப்பட்டார். இந்த முற்றங்கள் பல வீடுகளின் நடுப்பகுதிபோல இருந்தன. பெண்கள் இந்தப் பகுதியில் சுதந்திரமாகப் பழகினார்கள். ஆயினும், அந்த வழியாக ஓர் ஆண் வந்தால், அவர்கள் அனைவரும் சிறிய எலிகளைப்போல தங்கள் வீடுகளுக்குள் ஓடிவிடுவார்கள். அந்த ஆண் அந்த இடத்தைவிட்டு மறைந்தபிறகு, அவர்கள் அனைவரும் மீண்டும் அந்த முற்றத்துக்கு வந்துவிடுவார்கள். இந்த முற்றத்தில் கூடிய பெண்களை லில்லி சந்தித்தார். லில்லி அங்கு போய் அவர்களோடு உட்கார்ந்தார். அல்ஜீரியர்களின் மிக முக்கியமான உணவாகிய கூஸ்கஸ்ஸைக் கிளறவும், அதற்குத் தேவையான காய்கறிகளை உரிக்கவும் கற்றுக்கொண்டார். பெண்கள் சமைத்தபோது அவர்களுடைய குழந்தைகளைக் கவனித்துக்கொண்டார். நாளடைவில், இப்படிப்பட்ட அற்புதமான குடும்பச் சூழலில் அவர் இந்தப் பெண்களுக்கு இயேசுவைப்பற்றிக் கூறினார். லிலியாஸ் சொன்ன எல்லாவற்றையும் உன்னிப்பாகக் கேட்டு, அவர்கள் விசுவாசித்தார்கள். ஆனால், தாங்கள் ஒரு மாபெரும் நற்செய்தியைக் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்ற புரிதல் அவர்களுக்கு இல்லை. லில்லி சொல்வதையெல்லாம் கேட்டபின், "ஆம், இயேசு. ஆனால் இயேசுவும் முஹம்மதுவும்தான் கடவுளை சென்றடைவதற்கான வழி," என்று சொன்னார்கள். இயேசுவின் மரணத்தை அவர்களால் கடுகளவும் புரிந்துகொள்ளமுடியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இயேசுவின் மரணம் தேவையற்றது. ஏனென்றால், பாவத்துக்குப் பரிகாரமாக இயேசு மரித்தார் என்று சொன்னால் அது அவர்களுக்குப் புரியாது. அவர்களைப் பொறுத்தவரை நோன்பைக் கடைப்பிடிக்காததும், பாரம்பரியங்களைப் பின்பற்றாததும், சடங்குகளைச் சரியாகச் செய்யாததும்தான் பாவம். பாவம் இருதயம் சம்பந்தப்பட்ட அல்லது தேவனுடனான உறவு சம்பந்தப்பட்ட ஆழமான ஒன்று என்ற உணர்வு அவர்களுக்குக் கிடையாது. எனவே, இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவைகளைப் புரிந்துகொள்ள அவர்கள் கஷ்டப்பட்டார்கள். லில்லி ஒருமுறை "தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்," என்று யோவான் 3:16யைக் காட்டியபோது, ஒரு பெண், "இது தவறு. இல்லை, இல்லை. கடவுள் உலகை நேசிப்பதில்லை, அவர் ஆண்களை மட்டுமே நேசிக்கிறார், பெண்களை அல்ல," என்று பதில் சொன்னார். லிலியாஸ் ஒரு கடினமான கான்கிரீட் சுவரில் மோதியதுபோல் உணர்ந்தார்.
ஒரு நாள், லிலியாஸ் ஒரு சந்துவழியாக நடந்துபோய்க்கொண்டிருந்தபோது யாரோவொருவர் தன்னை மெல்லிய குரலில் கூப்பிடுவதுபோல் உணர்ந்து திரும்பிப்பார்த்தார். அருகிலிருந்த வீட்டின் சாளரத்தில் ஒருவருடைய கழுத்தில் ஒரு வண்ணத் துணி தொங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. அது ஒரு பெண் என்று அவர் உடனே புரிந்துகொண்டார். இந்தப் பெண் மிகவும் தைரியசாலி. ஏனென்றால், பெண்கள் சாளரத்தின்வழியாகப் பார்க்கக்கூடாது. பார்க்க அனுமதி கிடையாது. பார்க்கவே அனுமதி கிடையாது என்றால், பேசலாமா? லில்லி அருகில் போனார். அந்த வீட்டில் வாழ்ந்தவர்கள் யார், அவர்களுடைய நிலைமை என்ன என்று எந்த விவரமும் லில்லிக்குத் தெரியாது. அங்கு அவர் பாயா என்ற பெண்ணைச் சந்தித்தார். அவளுக்குப் 14 வயது. வேறொரு கிராமத்தைச் சேர்ந்த பெண். அப்போதுதான் திருமணமாகி இந்த நகரத்திற்கு வந்திருந்தாள். இந்த நகரத்தில் அவளுக்கு வேறு யாரையும் தெரியாது. அவளுடைய உறவினர்கள், நண்பர்கள் எல்லாரும் அவளுடைய சொந்த ஊரில் இருந்தார்கள். இந்தப் பெண் வெள்ளைக்காரர்களையும், அவர்களுடைய செய்தியையும்பற்றிக் கேள்விப்பட்டிருந்தாள். அவள் தான் கேள்விப்பட்ட இயேசுவின் செய்தியை நேசித்தாள், அதை வாஞ்சித்தாள். லில்லி அவளைச் சந்தித்து, அவளோடு பேசின ஒவ்வொரு வார்த்தையையும் வறண்ட நிலம் தன்மேல் பெய்யும் மழையை ஒரு சொட்டு வீணாக்காமல் குடிப்பதுபோல் குடித்தாள். வேத வசனங்களை மிக விரைவில் மனப்பாடம் செய்தாள். "தேவனுடைய குமாரன் என்னை நேசித்தார்; எனக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார், இதோ, உலகத்தின் முடிவுபரியந்தமும் நான் உங்களுடனே இருக்கிறேன். அவர் விரைவில் மீண்டும் வருவார்," என்று வசனங்களை மனப்பாடம் செய்தாள். மனப்பாடம்செய்த வசனங்களை அவள் மீண்டும் மீண்டும் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள். பாயா மிகவும் பிரகாசமான இளம் பெண். அவள் காரியங்களை மிக எளிதாகவும், விரைவாகவும் புரிந்துகொண்டாள். அவளுக்கு எழுதப் படிக்கத் தெரியும். அந்தக் காலத்தில் இது மிகவும் அசாதாரணம். அவளுடைய எளிமையான விசுவாசமும், தெளிவான புரிதலும் லில்லியாசுக்கும் அவருடைய குழுவினருக்கும் பெரிய ஊக்கமாக இருந்தது. ஆனால், பாயா பிரசவத்தின்போது இறந்துவிட்டார். அப்போது அவளுக்கு வயது 16. "அல்ஜீரியாவில் கிறிஸ்தவனாக வாழ்வது மிகவும் கடினம் என்பதால், ஒருவேளை தேவன் அவள்மேல் இரங்கி அவளை எடுத்துக்கொண்டாரோ! இதுவும் அவருடைய இரக்கமே!" என்று லிலியாஸ் தன் நாளேட்டில் எழுதினார்.
இந்த நேரத்தில், அவர்கள் புதிய விசுவாசிகளுக்கு ஏற்பட்ட விசித்திரமான நிலைமையைக் கண்டு கலங்கினார்கள், கதறினார்கள். புதிய விசுவாசிகள் திடீரென்று காணாமல் போனார்கள் அல்லது கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொண்ட அடுத்தநாளே விசுவாசத்தை மறுதலித்தார்கள் அல்லது இவர்களைச் சந்திக்க மறுத்தார்கள் அல்லது இவர்களைக் கண்டதும் ஓடினார்கள். பயமா அல்லது வெறுப்பா? என்ன நடக்கிறது என்று அவர்களுக்குப் புரியவில்லை. புரியாத புதிர். புதிய விசுவாசிகளின் உணவிலும், தண்ணீரிலும் ஒருவிதமான போதை மருந்தைக் கலந்து கொடுப்பதாகவும், அதனால்தான் அவர்கள் இப்படி நடப்பதாகவும் லில்லி கேள்விப்பட்டார். அந்தப் போதை மருந்து ஒருவிதமான மருட்சியையும், மயக்கத்தையும், மாயத்தோற்றத்தையும் உருவாக்கியது; அவர்களுடைய புலன்களின் இயல்பான திறன்களை மழுங்கடித்தது; அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டை இழந்து பிறருடைய கட்டுப்பாட்டிற்கு உள்ளானார்கள். பிறர் ஆட்டுவிக்கும் பொம்மைகளானார்கள். புதிய விசுவாசிகளுக்கு அவர்களுடைய குடும்பத்தாரே இந்தப் போதைமருந்தைக் கொடுத்தார்கள். போதைமருந்தைக் கொடுத்து, அவர்களைப் பயங்கரமான காரியங்களைச் செய்யவோ அல்லது அவர்களுடைய விசுவாசத்தை மறுதலிக்கவோ அல்லது கிறிஸ்தவர்களைச் சந்திக்கவோ கூடாது என்று வற்புறுத்தினார்கள், பயமுறுத்தினார்கள், கட்டாயப்படுத்தினார்கள். லிலியாசால் இதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. உண்மையாகவே என்ன நடந்தது என்பதைப்பற்றி லிலியாஸ் விரிவாக எழுதவில்லை; ஆனால், லிலியாசும் அவருடைய குழுவினரும் இதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும், இந்தத் தொடர்ச்சியான ஆவிக்குரிய போராட்டத்தைப்பற்றிய தன் உணர்வையும் அவர் எழுதியிருக்கிறார். இந்தக் கொடுமையின் கடுமையையும், தாங்கொணா வேதனையையும், வலியையும் அவர் தன் நாளேட்டில் எழுதுகிறார். எதிரி தங்களுக்கு மிக அருகில் இருப்பதுபோலவே அவர்கள் உணர்ந்தார்கள். விடுதலைக்காகவும், திறந்த வானத்துக்காகவும் கதறியபோதும் வானம் இரும்பைப்போல் அடைபட்டிருந்ததாக தான் உணர்ந்ததாகவும் அவர் எழுதினார். கர்த்தர் வேலைசெய்யவில்லையா? எங்கள் வேலையில் தேவன் ஏன் வேலை செய்யவில்லை? ஏன் இதைத் தடுக்கவில்லை? இந்தப் புதிய விசுவாசிகள் இவ்வளவு சீக்கிரத்தில் ஏன் இடறுகிறார்கள்? தடுமாறுகிறார்கள்? ஆயினும், லில்லி ஊழியத்தை ஒருபோதும் நிறுத்தவில்லை. தளராது பிடிவாதமாக அவர் தொடர்ந்தார்.
மக்களைச் சந்திப்பதற்கு அவர் புதிய, ஆக்கப்பூர்வமான வழிகளை உருவாக்கிக்கொண்டேயிருந்தார். அவர் தன் தொலைநோக்குப் பார்வையிலிருந்து விலகவில்லை. தையல் வகுப்புகள், ஆங்கில வகுப்புகள் நடத்தினார்கள். பெண்களுக்குத் தனியாக அடிப்படைக் கல்வியறிவு வகுப்புகள் நடத்தினார்கள். எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தால் அவர்கள் பொது அறிவும் வளரும், அவர்கள் தானாகவே வேதாகமத்தையும் வாசிக்க முடியும் என்பது அவர்களுடைய கணிப்பு. கொஞ்சம் கற்ற மூத்த பையன்கள் இளைய பையன்களுக்குக் கற்பிக்குமாறு அவர்கள் தங்கள் பாடத் திட்டங்களை வகுத்தார்கள். அவிசுவாசிகளின் எதிர்ப்பு ஒருபுறம் என்றால், சில நேரங்களில், விசுவாசிகளின் வாழ்க்கையைக் கண்டு அவர் சோர்வடைந்தார். சில ஆண்டுகளாக, இன்னும் சிலர் சில தசாப்தங்களாக அவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தபோதும் சில விசுவாசிகள் இரட்டை வேடம்போட்டு வாழ்ந்ததைக் கண்டு மனமடிந்தார். சிலருக்கு இரண்டு மனைவிகள்; இன்னும் சிலர் இன்னொரு வகையான பாவத்தில். இதைப்பற்றிய முழுமையான விவரங்கள் அவருடைய நாளேட்டில் காணப்படவில்லை. ஆனால், விசுவாசிகள்மேல் தான் வைத்திருந்த நம்பிக்கைக்கு அவர்கள் துரோகம் இழைத்ததால் தன் இருதயம் உடைந்து நொறுங்கியதைப்பற்றி அவர் தன் நாட்குறிப்பில் எழுதுகிறார்.
இவை அனைத்தும் அவருடைய உடல் நலத்தைப் பாதித்தது. ஆயினும், எந்தத் தொய்வுமின்றி, ஊழியம் தொடர்ந்தது, விரிவடைந்தது. அல்ஜீரியாவில் மூன்று இடங்களில் தங்கள் மையங்களை ஆரம்பித்து அந்தத் தளங்களிலிருந்து சுற்றியுள்ள இடங்களில் ஊழியம் செய்தார்கள். அவர்கள் ஏற்கனேவே வாங்கியிருந்த Rue de Croissant வீடு அந்த மூன்று மையங்களில் ஒரு மையமாகச் செயல்பட்டது. ஊழியம் வளர்ந்தது, விரிவடைந்தது. அதிகமான மிஷனரிகள் வந்தார்கள். எல்லாரும் பெண்கள்; ஆனால், விரைவில் சில இளம் தம்பதிகளும், சில குடும்பங்களும்கூட களப்பணியில் சேர்ந்தார்கள். எத்தனைபேர் வந்தாலும் போதாது என்று சொல்லும் அளவுக்கு ஊழியம் வளர்ந்து விரிவடைந்தது. தேவை எப்போதும் இருந்தது.
பிளான்ச் நாட்டின் வேறொரு பகுதியில் ஒரு பெரிய வீட்டை வாங்கினார்; அதை அவர்கள் "தா நாமா" என்று அழைத்தார்கள். இது அவர்களுடைய புதிய தலைமையகமாக மாறியது. இது அரேபியக் குடும்பங்களின் அடைக்கலமாக மாறியது. ஆம், இங்கு அரேபியக் குடும்பங்கள் தங்கலாம்; விசுவாசிகள் வீட்டிலிருந்து துரத்தப்பட்டபோது இங்கு வந்து தங்கினார்கள்; விசுவாசிகள் மிரட்டப்பட்டபோது அவர்களுக்கு இது பாதுகாப்பான ஒதுங்கும் மறைவிடமாக இருந்தது. ஆம், இது துன்பப்பட்ட, ஒதுக்கப்பட்ட, விரட்டப்பட்ட விசுவாசிகளின் அடைக்கலப் பட்டணம்.
விசுவாசிகள் மட்டும் அல்ல, மிஷனரிகள் பலர் இங்கு தங்கினார்கள். நிறைய மிஷனரிகள் வந்ததால் அவர்கள் வேறு இடங்களுக்குச் செல்வதற்குமுன் இங்குதான் தங்கினார்கள்.
கடைசியாக ஒரு வாலிபன் இவர்களுடைய குழுவில் மிஷனரியாக வந்து சேர்ந்தார். லிலியாசின் குழுவினருக்கு மிகவும் மகிழ்ச்சி. அல்ஜீரியாவில் தாங்கள் நிறுவியிருக்கும் பல்வேறு நிலையங்களைச் சுற்றிப்பார்க்கவும், வீட்டின் காரியங்களைக் கவனிக்கவும் ஒரு வாலிபன் இருக்கிறான் என்ற எண்ணம் அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
அல்ஜீரியாவில் அடிக்கடி டைபஸ் காய்ச்சல் வரும். அதில் பலர் இறந்தார்கள். அதில் இந்த வாலிபன் இறந்துபோனான். சிலர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார்கள். இன்னும் சிலர் காலநிலையையும், வேறு சில கஷ்டங்களையும் சகிக்கமுடியாமல் நாடுதிரும்பினார்கள்.
எத்தனை இடர்கள் வந்தபோதும் நற்செய்தி நாலாபக்கங்களிலும் பரவியது. லிலியாசும் பிளாஞ்சும் நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கும், இதுவரை செல்லாத உள்ளூர்களுக்கும் சென்று நற்செய்தி அறிவித்தார்கள். மூன்று முக்கியமான மையங்கள். நூற்றுக்கணக்கான சிறுசிறு மையங்கள். நிறைய உடன்ஊழியக்காரர்கள், மிஷனரிகள், ஏராளமான பெண் ஊழியர்கள். பணிச்சுமை அதிகம்; நிதித்தேவை அதிகம். லிலியாசும், பிளாஞ்சும் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவளித்தார்கள். வெளிநாடுகளிலிருந்து சிலர் சில நேரங்களில் நன்கொடைகள் கொடுத்தார்கள். ஆனால், பெரும்பாலும் அவர்களாகவே எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டார்கள்.
துண்டுப்பிரசுரங்கள் எழுதினார்கள்; அரபு மொழியில் கட்டுரைகள் எழுதினார்கள். லிலியாஸ் ஓவியர் என்று நான் ஏற்கெனவே சொன்னேன். எனவே, அவர் வெறுமனே எழுதவில்லை; படங்கள் வரைந்து அவைகளின்மூலம் நற்செய்தியை அறிவித்தார். படக்கதைகள் உருவாக்கினார். அவர்கள் நற்செய்திகளை அரபு மொழிக்கு மொழிபெயர்த்தார்கள். இவை அனைத்தும் ஒரே நேரத்தில் நடந்தன. ஒரு வேலையை முடித்தபின் இன்னொரு வேலையை ஆரம்பிக்கவில்லை. பயணம் செய்வது, மக்களைச் சந்திப்பது, கூட்டங்கள் நடத்துவது, படம் வரைவது, எழுதுவது, மொழிபெயர்ப்பது, மக்களுக்குப் பாடம் கற்பிப்பது, மிஷனரிகளை நடத்துவது என எல்லாம் ஒரே நேரத்தில் நடந்தன. பணிச்சுமை எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
லிலியாஸ் தன் நாளேட்டில் பின்வருமாறு எழுதுகிறார். "நாங்கள் செய்துகொண்டிருக்கும் பணிவிடையின் அவலநிலையை எண்ணி நான் அடிக்கடி வருத்தப்படுகிறேன். இன்று காலை ஒரு தேனீ எனக்கு மிகவும் ஆறுதல் அளித்தது. நிறைய வேலைசெய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. செய்வதற்கு நிறைய வேலை இருக்கிறது. செய்ய வேண்டிய வேலைகளுக்கு முடிவேயில்லை. செய்துகொண்டேயிருக்கிறோம். ஆனால், எதையும் முழுமையாகச் செய்துமுடித்ததுபோல் தெரியவில்லை. நற்செய்திப் பணியில் மட்டுமே கவனம் செலுத்தினால், கல்விப்பணி அல்லது மருத்துவப் பணி பாதிக்கப்படும். கல்விப்பணியில் அல்லது மருத்துவப் பணியில் கவனம் செலுத்தினால் ஆத்துமாக்களைத் தொட்டுவிட்டு, விட்டுவிட்டுப் போவதுபோல் இருக்கிறது. உருவகமாகச் சொல்வதானால், தேனீ அதைத்தான் செய்துகொண்டிருக்கிறது. அது சில ப்ளாக்பெர்ரி தளிர்களுக்கிடையே பறந்துகொண்டிருந்தது. அங்கும் இங்குமாகச் சில பூக்களைத் தொட்டுத்தொட்டுப் பறந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு தளிரையும் தொடும்போது தேனீ தன்னை அறியாமலே ஒவ்வொரு தொடுதலிலும் உயிரைப் பரிமாறுகிறது. " உயிர்" "உயிர்" "உயிர்." ஆம், அது மகரந்தத்துகள்களை இடத்துக்கு இடம் பரப்புகின்றன. தங்களுடைய தொடுதலினால் அங்கு வசந்தம் பிறக்கும் என்று அந்தத் தேனீக்குத் தெரியாது. தெரிந்தாலும் வசந்தத்தை அந்தத் தேனீ பார்க்குமா என்று தெரியாது. அது தான் காணாத வசந்தத்துக்காக வேலைசெய்கிறது. நாமும் தேனீக்களைப்போல, உயிர்களை உருவாக்கும் திறன் கொண்ட மிகையூட்டிகளாக இருக்க வேண்டும் என்பதை மட்டுமே நாம் பார்க்க வேண்டும். தேவனும், அவருடைய நித்தியமும்தான் வேலையைச் செய்யும். ஆனாலும், அலைந்து திரியும், மேலீடாகத் தொட்டுத் தொட்டு ஓடுகிற, ஒரு பொருளிலிருந்து இன்னொரு பொருளுக்குப் பறந்துசெல்கிற, தேனீக்கள் அவருக்குத் தேவை!” என்று எழுதுகிறார்.
அவர்களுடைய குழுவில் அலி என்ற ஓர் அரேபியர் இருந்தார். அவர் ஒருநாள் சில தொலைதூர கிராமங்களுக்கு மலைகளில் பயணம் செய்துகொண்டிருந்தார். போகும் வழியில் இவர் இன்னொரு அரேபியரைச் சந்தித்தார், அவர் ஒரு நற்செய்தி நூலைப் படித்துக்கொண்டிருந்தார். அதைப் பார்த்ததும் அலி நின்று, "இந்த நற்செய்தி நூலைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" என்று கேட்டார். அதற்கு அவர், "இதுதான் சத்தியம் என்றும், இயேசு ஏன் மரித்தார் என்றும் எனக்குத் தெரியும்," என்றும் பதில் சொன்னார். அந்த மனிதர் இந்த நற்செய்தி நூலை வேறு யாரிடமிருந்தோ வாங்கியிருக்கிறார். இது லிலியாஸ் எழுதியது. அதை அந்த மனிதர் இந்த மலைக்கிராமத்தில் இப்போது படித்துக்கொண்டிருக்கிறார். அலி அவரிடம், "அப்படியானால், நீங்கள் ஒரு கிறிஸ்தவரா?" என்று கேட்க, அந்த மனிதன் குழப்பத்துடன் அலியைப் பார்த்து, "அது எனக்குத் தெரியாது. இயேசு எனக்காக மரித்தார் என்று எனக்குத் தெரியும். இந்தப் புத்தகத்தை நான் யாருக்கு வேண்டுமானாலும் படித்துக்காட்டுவேன். இயேசு எனக்காக மரித்தார் என்பதை யார் கேட்டாலும் சொல்லுவேன்," என்றார். ஆம், இலக்கியங்கள் பரவின. அல்ஜீரியாவின் தொலைதூரப் பகுதிகளுக்கும் துண்டுப்பிரசுரங்கள், நற்செய்தி நூல்கள் மக்களைச் சென்றடைந்தன. கனவில் இயேசுவைக் கண்ட சாட்சியங்களும் இருந்தன. சில சமயங்களில், தாங்கள் இயேசுவைத் தரிசித்ததாகவும், லிலியாசைப் பார்க்கச் சொன்னதாகவும் கூறி பலர் லிலியாசைத் தேடி வந்தார்கள்.
இந்த நேரத்தில் முதல் உலகப் போர் ஆரம்பித்தது. அதனால் மேலும் பல பின்னடைவுகள் ஏற்பட்டன. அல்ஜீரியா முழுவதும் இருந்த சிறிய புறக்காவல் நிலையங்கள் மூடப்பட்டன; பெரும்பாலான மிஷனரிகள் நாடு திரும்பினார்கள். போர் அறிவிக்கப்பட்ட நேரத்தில் லிலியாஸ் இங்கிலாந்தில் இருந்தார். எனவே, அவர் அல்ஜீரியாவுக்குத் திரும்புவதற்குக் கொஞ்சம் தாமதமானது. ஆனால், இந்த நேரத்தில், அவர் தன் முழுக் கவனத்தையும் அரபு இலக்கியத்தில் திருப்பினார். இஸ்லாமிய நாடுகளில் நற்செய்தி அறிவிப்பதற்கு கிறிஸ்துவின் செய்திகள் அரபு மொழியில் அவசியம் என்று லிலியாஸ் உறுதியாக நம்பினார். மக்களை நேரில் சந்தித்து நற்செய்தி அறிவிப்பதற்கு இஸ்லாமிய நாடுகளில் தடைகளும், தடங்கல்களும் ஏற்படலாம். ஆனால், விருப்பமுள்ள ஒருவன் ஒரு கைப்பிரதியைத் தன் பையில் வைத்துக்கொண்டு, வசதிப்படும்போது அதை வாசிப்பதில் எந்தச் சிரமமும் இருக்காது. இஸ்லாமிய நாடுகளுக்கு இது அத்தியாவசியமானது என்று லிலியாஸ் உணர்ந்தார். பொது இடங்களில் பேசினால், ஒருவேளை மக்கள் எதிர்க்கக்கூடும், எதிர் கேள்விகள் கேட்கக்கூடும் அல்லது பேசும்போது பேசும் செய்தியை மக்கள் கேட்க வேண்டும். இஸ்லாமைத்தவிர வேறொரு செய்தியை ஒருவன் கேட்டால் அவன் தன் விசுவாசத்தை மறுதலித்ததாகக் கருதப்படும். அதனால், அவன் சித்திரவதைக்குள்ளாவான். எனவே பொதுவெளியில் நற்செய்தி அறிவிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால், சிறிய கைப்பிரதிகள் மிகவும் பயனுள்ளவைகளாக இருந்தன. ஆங்கிலத்தில் இருந்த சிறிய கைப்பிரதிகளை அவர்கள் அரபு மொழியில் மொழிபெயர்த்துவைத்திருந்தார்கள். ஆனால், லிலியாஸ் இதில் திருப்தியடையவில்லை. அல்ஜீரியாவில் நற்செய்தி அறிவிக்க இது போதாது என்று அவர் கருதினார். அவர் ஒரு கலைஞர், ஓர் ஓவியர். எனவே, கைப்பிரதிகளை அவர் ஒரு கலைஞரின் பார்வையோடு புதிய வடிவில் வனைய விரும்பினார். புதிய கைப்பிரதிகள், புதிய வடிவம், குழந்தைகளுக்காக, பெரியவர்களுக்காகத் தனித்தனி கைப்பிரதிகள், கதைகள். கைப்பிரதிகளில் டாம் ஜாக், வில்லியம்போன்ற ஆங்கிலப் பெயர்களுக்கு மாற்றாக அஹ்மது, அலி, முகமது என்ற பெயர்களையும், பாலைவனக் காட்சிகளையும், அல்ஜீரியாவின் அன்றாட வாழ்க்கையையும் பின்புலமாகக் கொண்டு அவர் கைப்பிரதிகள் எழுதினார். தேவன் அவருடைய இருதயத்தையும், மனதையும் பற்பல எண்ணங்களால் நிரப்பினார்.
லில்லியாசும், பிளாஞ்சும் இந்தக் கைப்பிரதிகளை எழுதினார்கள்; விளக்கப்படங்களை வரைந்தார்கள்; அச்சிட்டார்கள். விளக்கப்படங்களை லிலியாஸ் கருப்பு வெள்ளையில் வரையவில்லை; வண்ணத்தில் வரைந்தார். மேலும், அவைகளை வழக்கமான வெள்ளைத்தாளில் அச்சிடாமல் கிரீம் தாளில் அச்சிட்டார். இந்த அழகான விளக்கப்படங்களை அவர் மேற்கத்திய பாணியில் வரையாமல் கிழக்கத்திய பாணியில் வரைந்தார். கைப்பிரதிகள் மிகவும் கவர்ச்சியாக இருந்தன. அவைகளைப் பார்க்கும்போதே அவைகளை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும் அளவுக்கு அவைகள் அழகாக இருந்தன. மக்கள் அவைகளை விரும்பினார்கள். ஒவ்வொரு கைப்பிரதியையும் ஒவ்வொருவரும் சேகரிக்க விரும்பினார்கள். அந்த நாட்களில் தாள் மிகவும் அரிதாகவே கிடைத்தது. அது ஓர் ஆடம்பரப்பொருளாகக் கருதப்பட்டது. இந்தப் பின்புலத்தில் லிலியாஸின் குழுவினரின் பிரயாசத்தைப் பார்க்க வேண்டும். முன்பு விநியோகித்த கைப்பிரதிகளைவிட இந்தக் கைப்பிரதிகளை மக்கள் ஆவலோடு வாங்கினார்கள். இந்தக் கைப்பிரதிகளின் பொருளடக்கமும் அதைவிட ஆழமாகவும், தெளிவாகவும், தொடர்புடையதாகவும் இருந்தது. பாலைவனத்தைப்பற்றிய கதைகளும், உவமைகளும் இருந்தன, அரேபிய வாழ்க்கை முறை கதைகள் இருந்தன; குரானிலிருந்து கேள்விகளும், அவைகளுக்குப் பழைய ஏற்பாட்டிலிருந்து பதில்களும் கொடுக்கப்பட்டிருந்தன. அவர்கள் மொத்தம் 115 இலக்கியங்களை வெளியிட்டார்கள். அவைகளில் 57 கைப்பிரதிகள் அடங்கும். இவையனைத்தும் அல்ஜீரியாவில் வெளியிடப்பட்டன.
லிலியாஸ் அவர்களுடைய கலாச்சாரத்தின் நுணுக்கங்களைக் கருத்தாய் ஆராய்ந்துபார்த்து, மக்களைச் சந்திப்பதற்கு அவர்களுடைய கலாச்சாரத்துக்குப் பொருத்தமான சிறந்த வழிகளைக் கண்டுபிடித்தார். ஆண்களைச் சந்திப்பதற்கு உணவகங்கள் பொருத்தமாக இருக்கும் என்று அவர் நினைத்தார். அங்குதான் அவர்கள் கைப்பிரதிகளையும், சிறு புத்தகங்களையும் கொண்டுசென்று படிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும் என்று அவர் கருதினார். அவர்களுடைய கலாசாரத்துக்கும், ஊருக்கும் ஏற்ற கதைகளின்மூலம் நற்செய்தி சொல்லவேண்டிய தேவையை அவர் உணர்ந்தார். எனவே, அதற்கும் அவர்கள் ஆட்களைப் பயிற்றுவித்தார்கள்.
அவர் பெண்களுக்கென்று பிரத்தியேகமாக வெளியூர் பயணங்களை ஏற்பாடுசெய்தார். அவர்களுடைய கலாச்சாரத்தின்படி ஆண்களும் பெண்களும் சேர்ந்து பயணிக்கக்கூடாது. எதிர்காலத்தின் ஒருவேளை அவர்கள் விவாகரத்து செய்யப்பட்டால், அவர்கள் வருமானம் ஈட்ட வழி கிடைக்கும் என்பதற்காக, தையல் வேலைகளையும், ஊசி வேலைகளையும் அவர் பெண்களுக்குக் கற்றுக்கொடுத்தார். விசுவாசிகள் துன்புறுத்தப்பட்டபோது வந்து தங்கும் விருந்தினர் இல்லங்களை அரேபிய பாணியில், அரேபிய மரச்சாமான்களுடன் வடிவமைத்தார்.
இவைகளையெல்லாம் அவர் 150 ஆண்டுகளுக்குமுன் செய்தார் என்பதை நினைத்துப்பாருங்கள். இந்தக் காலத்தில்கூட நமக்கு எழாத எவ்வளவு முற்போக்கான சிந்தனையோடு அவர்கள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதைப் பாருங்கள். அவர் ஒருமுறை அவர் ஐரோப்பாவில் ஒரு மாநாட்டில் கலந்துகொண்டபோது அங்கிருந்த ஒருவர், "முஸ்லீம்கள் நாசமான ஓர் இனம்," என்று விமரிசித்தார். இதைக் கேட்ட லிலியாஸ், கலாச்சாரம் பற்றிய உண்மையான நுண்ணறிவை வெளிப்படுத்தினார், “நாசமான இனம்! இது நம்பிக்கையின் தேவனின் அல்லது அன்பின் தேவனின் கருத்துபோல் தெரியவில்லை! நாசமான விசுவாசப்பிரமாணம்தான் அழிவுக்கு அருகில் உள்ளது. விதைத்தானியத்தை மூடி வைத்திருக்கும் உமிதான் நாசமானது. அவ்வளவுதான். அல்லேலூயா!" என்று அவர் தன் நாளேட்டில் எழுதினார். இதிலிருந்து அவர் கலாச்சாரத்தை எவ்வளவு அழகாகப் புரிந்துவைத்திருந்தார் என்று தெரிகிறது.
அல்ஜீரியா துறைமுகத்தில் கப்பலில் வந்திறங்கிய நாளிலிருந்து பிளாஞ்ச் ஹோவர்த் லிலியாசின் தோழியாகவும், துணையாகவும் இருந்தார். அவர்கள் இருவரும் 30 ஆண்டுகளாக மிகப் பலமான தோழமையை உருவாக்கினார்கள். ஏராளமான மிஷனரிகள் அல்ஜீரியாவிற்கு வந்தார்கள்; சிலர் தங்கினார்கள்; பலர் போனார்கள். சிலர் வந்து போனார்கள். எத்தனைபேர் வந்தாலும், எத்தனை பேர் போனாலும், பிளாஞ்ச் தன் கடைசிமூச்சுவரை லிலியாசோடு உறுதுணையாக இருந்தார். பிளாஞ்ச் பொதுவாகப் பயணம் செய்வதை வெறுத்தார். ஆனாலும், அவர் லிலியாசுடன் சேர்ந்து பாலைவனத்திலும், மலைகளிலும் பயணம்செய்தார். அல்ஜீரியாவுக்கு வருவதற்குமுன் வீட்டுவேலையென்றால் என்னவென்றே அவருக்குத் தெரியாது. குறிப்பாக, சமைப்பது, வீட்டைச் சுத்தம்செய்வது என்றால் என்னவென்று பிளாஞ்சிற்குத் தெரியாது; ஆனால், அல்ஜீரியாவில் வீட்டைச் சுத்தம்செய்வது, பராமரிப்பதுபோன்ற வேலைகளையெல்லாம் அவர்தான் செய்தார். வந்த மிஷனரிகள் அனைவருக்கும் அவர்தான் உணவு சமைத்தார். இந்த புறக்காவல் நிலையங்கள் வளர்ந்து வெற்றியடையத் தேவையான அனைத்துப் பின்னணி வேலைகளையும் அவர்தான் செய்தார். இவ்வளவு உண்மையும், உத்தமுமான பிளாஞ்ச், ஒரு பயணத்திற்குப்பிறகு களைத்து, நோய்வாய்ப்பட்டார். இருவரும் நோய்வாய்ப்பட்டார். லிலியாஸ் குணமடையத் தொடங்கினார். பிளாஞ்சும் குணமடைந்து வருவதாகதான் அவர் நினைத்தார். ஆனால், ப்ளாஞ்சு திடீரென்று காலமானார். லிலியாஸ் அங்கு பணியைத் தனியாகத் தொடர நேர்ந்தது. லிலியாஸ் பிளாஞ்சின் இழப்பையும், பணியையும் எப்படிச் சமாளிப்பாரோ என்று லிலியாசைப்பற்றி பலர் மிகவும் கவலைப்பட்டார்கள். பிளாஞ்சு உடலாலும், உள்ளத்தாலும் லிலியாசுக்கு உற்ற துணையாக இருந்தார். பிளாஞ்சின் மறைவுக்குப்பின் லிலியாஸின் தோழி ஹெலன் அவர்களுடன் வந்து சேர்ந்தார். பிளாஞ்சின் இழப்பிற்குப்பின் அவர் தன் துக்கத்தையும், துயரத்தையும் மேற்கொண்டு பணிகளை வழக்கம்போல் தொடர்ந்ததைப் பார்த்து பலர் பிரமித்தார்கள். ஆனால், லிலியாஸ் உடலால் உலகில் இருந்தாலும் அவருடைய உள்ளம் ஏற்கெனவே நித்தியத்துக்குள் நுழைந்துவிட்டது என்பதை அவருடைய நாட்குறிப்பைப் படிக்கும்போது தெரிகிறது. பிளாஞ்ச் தனக்குமுன்பே போய்விட்டார் என்றும், தான் இன்னும் தொடரவேண்டிய பணிகள் இருக்கின்றன என்றும் அவர் உணர்ந்தார்.
மக்களிடமிருந்து விலகி தனியாக ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்துகொண்டிருந்த சுஃபி சகோதரத்துவம் என்று அழைக்கப்படும் ஒரு வகையான முஸ்லிம்களின் கூட்டத்தைக்குறித்து லிலியாஸ் கேள்விப்பட்டார். இந்தப் பணிக்காகத்தான் தேவன் தனக்கு ஆயுள்நாட்களைக் கூட்டிக்கொடுத்திருக்கிறாரோ என்று லிலியாஸ் நினைத்தார். இவர்கள் முஸ்லிம் சித்தர்கள் அல்லது மறைஞானிகள் என்று சொல்லலாம். இவர்களுடைய வாழ்க்கை சில இஸ்லாமிய நம்பிக்கைகளும், சில விசித்திரமான ஆன்மீக நடைமுறைப் பழக்கங்களும் கலந்தவை. இவர்கள் பிற அரேபியர்கள், பெர்பர்கள் எனப் பிறரோடு தொடர்புகொள்ளாமல் மிகவும் ஒதுங்கி வாழ்ந்தார்கள். லிலியாஸ் இவர்கள்பால் ஈர்க்கப்பட்டார். லிலியாஸ் அவர்களைச் சந்தித்தார். அப்போது லிலியாசுக்கு 60 வயதுக்குமேல் இருக்கும். ஒரு பெண்ணை, அதுவும் ஓர் ஆங்கிலேயப் பெண்ணை இந்த முஸ்லிம் மறைஞானிகள் தங்களிடையே அனுமதித்தார்கள் என்றால் அதுவே அதிசயம்தான். இது நற்செய்தி அறிவிக்கக் கதவுகள் திறக்கப்பட வேண்டும் என்ற லில்லியாசின் ஜெபத்திற்குத் தேவனுடைய பதில். இந்த விஷயத்தில் லிலியாசைப்பற்றிச் சொல்வதானால், "அவர் மக்களைச் சந்திப்பதற்கான வழிகளை அறிந்திருந்தார்," என்று கூறலாம். இந்த மக்களில் உண்மையான பசியும், ஆர்வமும், தேடலும் இருந்ததை அவர் பார்த்தார். அவர்களோடு உரையாடுவதற்கு லிலியாஸ் பொதுவான தளத்தை உருவாக்கினார். அவர்கள் தேவனோடு ஒன்றிணைய விரும்புவதை அவர் கண்டறிந்தார். எனவே, அவர் அவர்களுக்கு யோவானின் நற்செய்தியைப்பற்றிச் சொன்னார். அவர்களில் பலர் அவருக்கு நல்ல நேர்மறையான பதிலளித்தார்கள். பதிலளித்தனர். அவர்களில் இரண்டுபேர் கிறிஸ்தவர்களானார்கள் என்று லிலியாஸ் தன் நாட்குறிப்பில் எழுதுகிறார். இந்த முஸ்லீம் மறைஞானத்தைப் புரிந்துகொள்வதற்கு அவர்கள் உதவியதாகவும் லில்லி குறிப்பிடுகிறார்.
லில்லி "ஏழு மடங்கு ரகசியத்தின் வழி" "The Way of the Seven-Fold Secret" என்ற நற்செய்தி புத்தகத்தை எழுதினார். இவை அனைத்தும் யோவான் நற்செய்தியில் உள்ள ""நான் இருக்கிறேன்" (I am) என்ற வாக்கியங்களை அடிப்படையாகக்கொண்டு எழுதப்பட்டது. இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இன்றும் இன்னும் இது மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கிறது.
7. இறுதி ஆண்டுகள் மற்றும் இறுதி நேரம் – இறுதி வரை செயலில் இருந்த உழைப்பு:
1927. லிலியாசின் உடல்நிலை அவ்வளவு நன்றாக இல்லை. வழக்கமாகவே அவர் நல்ல ஆரோக்கியமானவர் இல்லை. ஆனால், இப்பொது அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவருக்கு இருதய நோய் இருந்தது என்றும், அதனால் அறுவை சிகிச்சை செய்திருந்தார்கள் என்றும் நான் ஏற்கெனவே சொன்னேன். எனவே, அவர் இன்னும் உயிருடன் இருப்பதை மருத்துவர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். 1927இல் அவர் படுத்த படுக்கையானார். அவர் ஏறக்குறைய ஒரு வருடம் படுக்கையில் இருந்தார். அவர் படுத்திருந்தாலும் சும்மா இருக்கிற ஆள் இல்லை. படுக்கையிலும் தொடர்ந்து வேலை செய்தார்; அவருடைய படுக்கை அவர்களுடைய புதிய தலைமையகமாக மாறியது; மேலும் பல இலக்கியங்களை அவர் உருவாக்கினார்; உட்கார முடியாது; உட்கார்ந்தால் தலைசுற்றும். அந்த நிலைமையிலும், உட்காரக்கூட பலம் இல்லாத நிலைமையிலும் சில நேரங்களில் மனவுறுதியோடு எழுந்து உட்கார்ந்து தூரிகைகளைக்கொண்டு சில ஓவியங்களை வரைந்தார். பின்பு தலையணையின்மேல் சாய்ந்து ஜெபித்தார். "தேவன் இதை விரும்புகிறார் என்று நான் எதிர்பார்க்கிறேன்," என்று அவர் தன் நாளேட்டில் எழுதுகிறார். அவருடைய நிலை மருத்துவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனால், அவர் கொஞ்சம்கூட அசையவில்லை.
"கால்வாய் நீரூற்றோடு இணைக்கப்பட்டிருக்கும்வரை நீரோட்டம் கால்வாயில் பாய்ந்தோடுவதுபோல், நாம் செய்ய வேண்டிய பணிகள் முடியும்வரை நம் உடலுக்குரிய வாழ்க்கையும், ஆவிக்குரிய வாழ்க்கையும் தேவனோடு நேர்த்தியாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது எவ்வளவு பேரானந்தம்," என்று அவர் தன் நாளேட்டில் எழுதுகிறார். தான் உயிருடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் தேவனால் தனக்கு அருளப்பட்ட கிருபை என்றும், தன் வேலை முடியும்வரை தான் உயிர்வாழ்வேன் என்றும் அவருக்கு நிச்சயமாகத் தெரியும். 1928ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி இந்தப் பூமியில் அவருடைய பணி முடிந்தது. கடைசி நிமிடம்வரை அவர் தெளிந்த மனதோடு வாழ்ந்தார். உடலின் பலம் குன்றி படுக்கையில் படுத்தபிறகும் அவர் தொடர்ந்து எழுதினார், எழுத முடியாதபோது சொன்னார்; அதை வேறொருவர் எழுதினார். விளக்கப்படங்கள் வரைந்தார்; அவைகளை எப்படி அச்சிடுவது என்று அறிவுரைகள் கூறினார். கடைசி நாட்களில் அவர் நிறைய கடிதங்கள் எழுதினார். அப்போது தமிழ்நாட்டில் மிஷனரியாக ஊழியம்செய்துகொண்டிருந்த தன் நெருங்கிய தோழி ஆமி கார்மைக்கேலுக்கு அவர் எழுதிய கடிதம் மிக முக்கியான ஒன்றாகும். அவரால் எழுத முடியவில்லை. அவர் சொல்லச்சொல்ல வேறொருவர் எழுதினார்.
கடைசி நேரம். அவருடைய நண்பர்கள் அவரைச் சுற்றிக் கூடிநின்றார்கள். அவருக்குப் பிடித்த, "Jesus, lover of my soul," என்ற பாடலைப் பாடினார்கள். லிலியாஸ் சாளரத்தின்வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தார். "ஆறு குதிரைகள் பூட்டிய ஒரு தேர் நிற்கிறது," என்று பரவசத்தோடு முனகினார். அவருடைய தோழி ஹெலன், "நீங்கள் அழகான விஷயங்களைப் பார்க்கிறீர்களா?" என்று வினவ, அவர், "ஆம், பல, அழகான விஷயங்கள்," என்று பதிலளித்தாள். பின்னர் அவர் சுயநினைவிழந்து, நித்தியத்துக்குள் நுழைந்தார். அவருடைய நண்பர்கள் – பிரெஞ்சு மக்கள், அரேபியர்கள், பெர்பர் இனத்தவர்கள், புதிய விசுவாசிகள், மற்ற ஐரோப்பியர்கள், மிஷனரி குழுவினர் - எல்லாரும் சேர்ந்து லிலியாஸ் 40 வருடங்கள் அர்ப்பணித்துப் பணியாற்றிய அவருடைய அன்புக்குரிய அல்ஜீரியாவில் அவரை நல்லடக்கம்செய்தார்கள்.
8. முடிவுரை – ஒரு தலைமுறைக்குப் பேருதாரணம்:
Lillias Trotter தேவனையும், தேவ மக்களையும் உண்மையும் உத்தமுமாகச் சேவித்தார். விவரிக்கமுடியாத பலவீனத்திலும் ஆண்டவரின் அழைப்புக்கு அர்ப்பணிப்போடு கீழ்ப்படிந்தார். தன் காலடியில் கிடத்தப்பட்ட உலகத்தின் மகிமையைக் குப்பையென்று உதறிவிட்டு, பேரும் புகழும் சம்பாதிப்பதைத் துறந்துவிட்டு, ஒதுக்குப்புறமாக தேவனுக்காக கடினமான பாதையைத் தெரிந்தெடுத்தார். ஆயினும், தேவன் தனக்குத் தந்த கலையாற்றலைத் தன் வாழ்நாள் முழுவதும் கடைசி நிமிடம்வரை தேவனுக்காகப் பயன்படுத்துவதில் அவர் கண்ணும்கருத்துமாக இருந்தார். அவர் எழுதியதோடு நிறுத்தவில்லை, தேவன் தனக்குத் தந்த கொடையை வல்லமையாகப் பயன்படுத்தினார் என்பது மிகவும் முக்கியமானது, தனித்துவமானது. அவர் எழுதிய சிறுநூல்கள், கையேடுகள், வாசகர்களைக் கவரும்வகையில் அவைகள் வடிவமைக்கப்பட்ட விதம் தொலைநோக்குப் பார்வையுடையவை. அவை காலத்துக்கு அப்பாற்பட்டவை. அவருடைய உழைப்புக்கு ஏற்ற நீடித்த பலனை அவர் தன் காலத்தில் காணவில்லை என்றே சொல்லவேண்டும். அல்ஜீரியா இன்றும் இஸ்லாத்தின் கோட்டையாக உள்ளது. மக்கள்தொகையில் வெறும் 0.4% மட்டுமே கிறிஸ்தவர்கள். ஆனால், நற்செய்தியின் விதைகள் விதைக்கப்பட்டன. அல்ஜீரியக் கிறிஸ்தவர்கள் பலவீனமான இந்த ஆங்கிலப் பெண்ணுக்கு நிறையக் கடன்பட்டிருக்கிறார்கள். "தேவன் கொடுக்கச் சொல்வதைக் கொடுக்காமல் வைத்துக்கொள்வது பேரிழப்பு," என்று அவருக்குத் தெரியும்.
"குவிமையம்" என்ற தலைப்பில் அவர் எழுதிய ஒரு சிறுநூலிலிருந்து சில வாக்கியங்களைக் கூறி முடித்துக்கொள்வோம். "Turn your eyes upon Jesus” என்ற பாடல் உங்களுக்குத் தெரிந்தால், இந்த வாக்கியங்கள் ஒருவேளை உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். ஏனெனில், இந்த வரிகளே இந்தப் பாடலுக்கு ஆதாரமான வசனங்கள்.
உங்கள் ஆத்துமாவின் பார்வையை முழுவதுமாக இயேசுவை நோக்கித் திருப்புங்கள்; அவரையே நோக்கி, தொடர்ந்து நோக்கிப் பாருங்கள்; அவரைவிட்டு உங்கள் ஆத்துமாவின் பார்வையை அகற்றாதிருங்கள். அப்போது அவரைத்தவிர பிற அனைத்தும் ஒரு விசித்திரமான மங்கலாகத் தோன்றும். தேவனுடைய தெய்வீகப் பண்பினால் படைக்கப்பட்ட பரிசுத்தவான்களை ஈர்க்கும் அந்தத் தெய்வீக ஈர்ப்பு, தெய்வீகக் கவர்ச்சி உங்களைக் கவ்விக் பிடிக்கும். அவர் நம் இருதயத்தில் உள்ள அனைத்தையும் பெறுவதற்குத் தகுதியானவர். இதற்காக அவர் தம் இரத்தத்தைச் சிந்தினார், ஜீவனைத் தந்தார்.